Monday 30 October 2023

பெண் பூனைகள்

 

 

 

பூனைகள் விசித்திரமானவை

என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன
நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை
பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள்

வீட்டுப் பூனைகளும் சரி
துரத்திவிடப்பட்டவைகளும் சரி
நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை.

பசி எடுக்கும் வேளைகளில்
அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன

பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட

அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன

அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு

என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு.

வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி
போதுமானதாக இருப்பதில்லையோ???

கட்டாக்காலி நாய்களைப்போல்தான்
பூனைகளும் இப்போ பெருகிவிட்டன

வேலியோ மதிலோ எங்கு ஏறிக் கடப்பதாயினும் 
எல்லாமே அவற்றுக்குச் சாதகமாகவும் இலகுவாகவும் உள்ளன

ஆனால் இவற்றுக்கெல்லாம் மூலகாரணம்

தன் வீட்டு உணவு உருசியானது.

அதனாலேயே எல்லாப் பூனைகளும் என்னிடம் வருகின்றன என எண்ணி,

கத்தியபடி வரும் பூனைகளுக்கெல்லாம் உணவுபோடும் வீட்டுக்காரர்கள் தான்.

மருந்தே இல்லா நோய்

மாலை நேரச் சூரியன் மறையும் காட்சி அத்தனை அழகாய் இருந்தும் மதுவால் அதை இரசிக்க முடியவில்லை. பெரிய தோட்டத்துடனான வீடு. சமதரையாக இல்லாது மேடும் பள்ளமுமாக இருந்ததில் அதற்கேற்ற நிபுணர்களைக் கொண்டு காசைப் பார்க்காமல் வடிவமைத்ததில் எத்தனைத்தரம் பார்த்தாலும் சலிக்காத அழகுடன் அந்த வீட்டின் பின்பகுதியும் தோட்டமும் அழகாய் இருக்கும். வரும் நண்பர்கள் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும்கூட வாய்விட்டு அதன் அழகைப் புழுகாமலும் போனதில்லை. நிபுணர்கள் ஒருதடவைதான் வந்து வடிவமைத்தார்கள். அதன்பின் அவளே சிலதை புதிதாக நட்டும் மாற்றியும் அமைத்திருக்கிறாள்.

ரோசாக் கன்றுகள் மட்டும் விவதவிதமாகப் பூத்துக் குலுங்குவதை எத்தனை தடவை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. மாதம் ஒரு தடவை ஒருவர் வந்து கத்தரிப்பதைக் கத்தரித்து இலைகளைக் கூட்டிச் சுத்தம் செய்து புற்களை எல்லாம் வெட்டி அழகுபடுத்திவிட்டுப் போவார். அவர் இறந்து நான்கு மாதங்களாகிவிட்டன. வேறு ஆளைத் தேடவேண்டிய மனோநிலையும் அவளுக்கு இல்லாததனால் தோட்டம் குப்பைகள் நிறைந்து செடிகள் கண்டபடி வளர்ந்து தோட்டத்தின் அழகைக் கெடுக்கிறதுதான். இருந்தும் மது அதைப்பற்றி அக்கறையே இல்லாது மனதை எங்கோ விட்டபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

விடாது அழைத்த தொலைபேசி அழைப்பு அவளை நிகழ்வுக்கு கொண்டுவர, எழுந்து சென்று தொலைபேசியை எடுக்கு முன்னர் அது நின்றுபோய் இருந்தது. திரையைப் பார்த்தவளுக்கு மனதில் குற்ற உணர்வு ஏற்பட உடனே வந்த இலக்கத்தை அழுத்தி, அந்தப்பக்கம் தொலைபேசி எடுக்கப்பட "மன்னிச்சுக் கொள்ளுங்கோ அக்கா. எதோ நினைப்பில இருந்திட்டன். உடன வாறன்"  என்றபடி சப்பாத்தைக் கொழுவிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

பள்ளி முடிந்து வந்ததும் பிள்ளைகளுக்கு கொறிக்க ஏதாவது கொடுத்து ஒருமணிநேரம் தொலைக்காட்சி பார்க்க விட்டுவிட்டு ஐந்து மணி தொடக்கம் ஏழு மணிவரை ஒரு தமிழ் பெண்ணிடம் ஆங்கில ரியூசனுக்கு விட்டுவிட்டு இவள் திரும்பிவந்து இரவு உணவைத் தயாரித்து பிள்ளைகளின் உடைகளை எடுத்து கூடையில் போட்டுவிட்டு வீட்டையும் கூட்டி எல்லாம் ஒழுங்காக்கிவிட்டு பிள்ளைகளைத் திருப்பிக் கூட்டிவந்து இரவு உணவை உண்பதற்கு மேசைக்கு அழைக்கிறாள்.   

"அப்பா எங்கை அம்மா?"

"அவருக்கு வேலை கூடவாம். கொஞ்சம் பொறுத்துதான் வருவார் அப்பா. நீங்கள் சாப்பிடுங்கோ "

"நீங்கள் சாப்பிடேல்லையே?"

"அப்பா வந்தபிறகு அவரோட சேர்ந்து சாப்பிடுறன்" என்றவள் மகனின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள்.

" அப்பா சொக்லற் கொண்டு வருவாரோ? " மகள் கேட்கிறாள்.

"அப்பான்ர செல்லமெல்லோ நீங்கள். கட்டாயம் கொண்டு வருவார்"

"நேற்று அப்பா கொண்டுவரேல்லையே"

"அப்பா கொண்டுவந்து குசினி மேசையில் வச்சவர். நரி வந்து கொண்டு போட்டுது. இண்டைக்கு கட்டாயம் கொண்டருவார்"

பிள்ளைகளிடம் பொய் சொல்கிறோமே என்ற வேதனையும் வெட்கமும் அவள் மனதைச் சூழ்கிறது.

நாளை நான் கட்டாயம் இருவருக்கும் சொக்ளற்  வாங்கிக் கொடுக்கவேண்டும். அல்லது அவர்களுக்கு இவளின் மேல் நம்பிக்கையே இல்லாது போய்விடும்.

தனக்குள் தீர்மானித்தவளாக மிகுதி வேலைகளை முடித்து பிள்ளைகளைப் படுக்கைக்கு அழைத்துப் போய் தூங்க வைத்தபின்னும்  அடுத்தநாட் காலை வெள்ளன எழுந்து சமைத்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் எழ, சாப்பிட வேண்டும் என்ற நினைப்பேயின்றி படுக்கைக்குச் செல்கிறாள் மது.

 

...........................................................................................................................................................

 

பிரான்ஸ்சில் பிறந்த மது படிப்பில் கெட்டிக்காரி மட்டுமன்றி அழகிலும் குறைந்தவளல்ல. அவளின் பன்னிரண்டு வயதில் சராசரித் தமிழ்ப் பெற்றோரின் ஆசைக்கிணங்க லண்டனுக்குப் பெற்றோரோடு இடம்பெயர்ந்தவளுக்கு முதலில் லண்டன் பிடிக்காவிட்டாலும் போகப்போக யூனியில் இடம் கிடைத்து படிக்கவாரம்பித்ததும் பிடித்துப்போய்விட்டது.

பெற்றோர்கள் அங்கு கஷ்டப்பட்டுச் சேர்த்த காசைக் கொண்டுவந்து ஒரு கடை எடுத்து நடத்தவாரம்பிக்க இவளுக்கு அவர்களின் தலையீடு குறைய நிம்மதியாகப் படிக்கவாரம்பித்து தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்தாள்.  இரவில் அவள் பெரிதாக வெளியே சென்றதில்லை. ஆனாலும் ஒரு கூடப் படிக்கும் நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற அழைப்பை ஏற்று தாயிடம் கெஞ்சி மண்றாடி இரவு வரப் பிந்தும். அவளின் தந்தையே எல்லாம் முடியக் கூட்டிக்கொண்டு வந்து விடுவார் என்று தாயைச் சம்மதிக்க வைத்தபோது  "இதுதான் கடைசி. இனிமேல் இப்பிடிக் கண்டபடி திரிய அப்பா சம்மதிக்க மாட்டார்" என்ற எச்சரிக்கையோடு தாய் அனுமதிக்க நண்பியுடன் சென்றவள், பிறந்தநாள் கொண்டாட்டம் பப் ஒன்றில் என்றதும் நடுங்கித்தான் போனாள்.

"எனக்குப் பயமாய் இருக்கு டொரத்தி, அம்மாக்குத் தெரிஞ்சா பிரச்சனை" என்று முனுமுனுதத்தவளை "கேய் யு ஆர் நொட் எ சைல்ட் " என்று நகைத்தபடி கேலி செய்தாள் டொரத்தி. அங்குதான் நவீனை முதல் முதலில் சந்தித்தது. கண்டதும் காதல் என்று ஒன்றும் ஏற்படாவிட்டாலும் அவனும் அதே யூனியில் படித்ததால் அதன்பின் தானாகவே நிகழ்ந்த சந்திப்புக்களும் அவனின் கண்ணியமும் அவளைக் கவர அவனே "நாளை என்னுடன் ரெஸ்ரோரன்ற் வருகிறாயா" என்று அழைத்தான்.

ஒருநாள் கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் என்னைப் போலத்தான் உனக்கும் இரவிலே தூக்க முடியாமலிருக்கா என்று அவன் கேட்டு தன் காதலை வெளிப்படுத்த, நிறையத் தமிழ்ப் படம் பார்க்கிறாயா என்று சினிமாப் பாணியிலேயே அவளும் வெட்கப்பட்டு காதலை வெளிப்படுத்த காலம் எப்படித்தான் விரைதோடியதோ இருவருக்கும் தெரியவில்லை.

பெற்றோருக்குச் சொல்லாமல் இரவில் அதிகம் வெளியே தாங்காமல் படிப்பையும் காதலையும் சமமாகப் பார்த்துக்கொண்டதால் எந்தத் தடங்கலும் ஏற்படாது போனது. படித்து முடித்த கையோடு பிரெஞ்சு விமான சேவை ஒன்றில் நல்ல ஊதியத்துக்கு உடனேயே அவளுக்கு வேலையும் கிடைத்தது. அவன் எத்தனை முயன்றும் ஒரு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கவே இல்லை.

"உமக்கு என்ன. நல்ல வேலையும் சம்பளமும். ஆண்களுக்கு ஏன் வேலை தரப்போறாங்கள்" என்பதாய் சலிப்புடன் அவன் கதை  நீளும்.

"நவீன், மனத்தைத் தளர விடவேண்டாம். எதுக்கும் சும்மா இருக்காமல் மாஸ்ரஸ் செய்யுங்கோ"

"மூண்டு வருடங்கள் படிச்சே அலுத்திட்டுது. இன்னும் ஒரு வருடமா?"

"கட்டாயம் அதுக்குப் பிறகு வேலை கிடைக்கும். ஒரு பகுதி நேர வேலை செய்து கொண்டு படியுங்கோ"

நவீனுக்கு நண்பர்களூடாக மதுவே வேலையும் ஒழுங்குசெய்து அவனுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததுமல்லாமல் வாரம் ஒருதடவை இருவரும் நாள் முழுதும் எங்காவது சுற்றிவிட்டு வீடுவருவதுமாக காதலையும் தக்கவைத்துக் கொண்டிருக்க மதுவின் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது.

"மது, இங்க இந்தப் படத்தைப் பார். பெடியன் இன்ஜினியர். இரண்டே இரண்டு பெடியள்"

படத்தை மறுக்காமல் வாங்கி இரண்டு நாள் வைத்திருந்துவிட்டு "எனக்குப் பிடிக்கேல்லை" என்றவளை ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டனர். ஒன்று இரண்டாகி நான்காகி ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு நொண்டிச் சாட்டுச் சொல்லிக் காலங்கடத்தி, நவீன் படித்து முடித்ததும் இனிச் சொல்லித்தான் தீரவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்துத் தாயிடம் வருகிறாள் மது. எல்லா விசாரணைகளும் முடிந்தபின்னர்

"உது சரிவராது. உந்த ஊர்ல செய்தால் எங்கட மானம் போயிடும்"

"நாங்கள் இரண்டுபேரும் லவ் பண்ணுறம். அவரை விட்டுட்டு வேற யாரையும் நான் கட்ட முடியாது"

"உதுக்குத்தான் நாங்கள் பெத்து வளர்த்தனாங்களோ" 

"அம்மா எனக்கு இப்ப 24 வயது"

"அதுக்காக கண்டவனையும் கட்டப்போறன் எண்ணுவியோ?"

"உங்கட சம்மதத்தோட தான் கட்டவேணும் எண்டுதான் எங்களுக்கும்  விருப்பம்"

"கடைசிவரை நாங்கள் சம்மதிக்கமாட்டம்"

"சரியம்மா இனி உங்கடை விருப்பம்"

அடுத்த ஒருவாரம் தாயோ தகப்பனோ இவளோடு கதைக்காமல் இவளை உதாசீனம் செய்ய, அடுத்தடுத்த நாட்களில் நவீனுடன் கதைத்து அவனை ஒருவாறு சம்மதிக்க வைத்து அவன் பெற்றோருடன் கதைக்கவைத்து எல்லாம் தோல்வியில் முடிய, "மது நாங்கள் அடுத்த மாதமே கலியாணம் கட்டுவம் என்று இவளுக்கு நம்பிக்கை குடுத்து இருவரும் பதிவுத் திருமணம் செய்தபின்னரும் இரு பக்கத்தாரும் இவர்களை ஒதுக்கிவைக்க,  நவீன் இவளை கவலை கொள்ளவிடாது தாங்கிப்பிடித்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கும் வேலை கிடைத்து இரண்டு ஆண்டுகளில் இருவர் பேரிலும் வீடு ஒன்றையும் வாங்கிய பின்னர்தான் அடுத்ததாக குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்ததும்.

குழந்தை வயிற்றில் வளர வளரப் பெற்றோரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எழுந்ததை உணர்ந்தும் இவள் அடக்கிக்கொண்டாள். முதல் ஆண்குழந்தை பிறந்தபோது எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு நவீன் சென்று தன் பெற்றோரை மட்டுமன்றி மாமன் மாமியைச் சந்தித்ததில் பெற்றோரின் மனம் பெரிதாக இளகாவிட்டாலும் மதுவின் பெற்றோர் உடனே வந்து பேரப்பிள்ளையைப் பார்த்தது மதுவுக்கும் இவனுக்கும் ஆறுதலாகிப் போனதுதான்.  

ஒருமாதம் செல்ல பிள்ளையையும் தூக்கிக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குப் போன நவீனையும் மதுவையும் மன்னிக்க மனமில்லை தான் அவர்களுக்கு. ஆயினும் பேரனைப் பார்த்தபின் மனம் இளகியதில் உள்ளே வாங்கோ என்று  கூப்பிட்டு இருக்க வைத்தாலும் பெரிதாக அவர்களுடன் ஒட்ட மனம் ஒப்பவில்லை மதுமிதாவால்.

நவீன் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவந்தாலும் இவள் எப்பவாவதுதான் சென்றுவருவாள். அவவின்ர சாதித் தடிப்பைப் பாரன் என்று நவீனின் தாய் கூறுவதை நவீன் ஏற்காது அவள் அப்பிடிப் பட்டவள் இல்லை அம்மா. நீங்களும் தானே அவள் வந்தால் முகம் குடுத்து பெரிசாக் கதைக்கிறேல்லை என்பான்.

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பின் பெற்றவளே மதுவைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக்கொண்டாள். ஆனாலும் பேர்த்தியைப் பார்க்க நவீனின் பெற்றோர் வந்தபோது கதவைத் திறந்துவிட்டு வாங்கோ என்றுகூடச் சொல்லாமல் உன்ர மாமனும் மாமியும் வந்திருக்கினம் போய்ப் பார் என்றுவிட்டு சமையல் அறையில் போய்நிற்க, மதுவுக்குத் தாயின் மேல் கோபம் வந்ததுதான்.

எப்பிடிச் சொன்னாலும் அம்மா விளங்கிக் கொள்ளப்போவதில்லை. ஆனாலும் ஆறுதலா அம்மாவுக்கு விளங்கப்படுத்தவேணும் என எண்ணிக்கொண்டாள். அந்த நேரம் பார்த்து நவீனின் நண்பன் வேணுவும் மனைவியும் வீட்டுக்கு வந்ததில் நிலமை மோசமடையவில்லை. மதுவின் பெற்றோருடன் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு எங்கே நவீன் என்கிறாள் வேணுவின் மனைவி கலா. வேணு கேட்க வேண்டிய கேள்வியை இவள் ஏன் கேட்கிறாள் என்னும் நெருடல் மதுவுக்கு எழுந்தாலும் அவருக்கு இண்டைக்கு அரைநாள் வேலை. இன்னும் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவார் என்று மது கூறியவுடன் சரி அவர் வரும்வரை யும் இருந்திட்டுப் போவம் என்கிறாள் கலா.

அவளின் நடவடிக்கை மதுவுக்குப் பெரிதாகப் பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் திருமணமான புதிதில் இவர்கள் மனதை ஆற்றிக்கொள்ள நண்பன் வேணுவின் வீட்டுக்குப் போவார்கள். மது இருப்பதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல் நவீனுடனேயே அவள் கதைத்துக்கொண்டே இருப்பாள். ஆரம்பத்தில் அது  சாதாரணம் என்றுதான் மதுவும் எண்ணினாள். ஆனால் போகப்போக மது அவதானித்துப் பார்த்ததில் நவீனைக் கண்டவுடன் அவள் கண்களில் ஒரு ஒளிர்வை அவதானித்தபின் மது அவர்கள் வீட்டுக்குச் செல்வதை குறைத்துக்கொண்டாலும் தொலைபேசியில் நவீனும் வேணுவும் கதைத்துக்கொள் வதை நிறுத்தவில்லை.

மாமியும் மாமாவும் வந்திருக்கும்போது தாம் வந்தது எத்தனை இடைஞ்சல் என்று விளங்காமல் நவீனைப் பார்த்துவீட்டுப் போவோம் என்றது எரிச்சலைக் கிளப்பியதுதான். ஆயினும் போங்கோ என்று சொல்லவா முடியும்? வேணு மிகவும் நல்லவர். மதுவைத் தன் தங்கை என்று கூறி நாகரீகமாக நடந்துகொள்வார். ஆனால் இவள் கலாதான் சரியில்லை என்று மதுவின் மனம் சொல்லிக்கொண்டே இருக்குது.

நவீன் வேலையால் வந்தவுடன் அவன் பெற்றோருடன் கதைக்கக்கூட விடாது. கலாவே அவனுடன் கதைத்துக்கொண்டிருக்க மதுவின் தாய்தான் இவளைக் குசினிக்குள் அழைத்துச்சென்று உவளை முதல்ல வெளியில கலை. மருமேன் வந்தநேரம் தொடக்கம் விடாமல் கதைச்சுக்கொண்டிருக்கிறாள். எனக்கெண்டால் நல்லதாப் படேல்லை என்றபின் இவள் சென்று நவீன் நீங்கள் குளிச்சிட்டு வந்து கதையுங்கோ என்று சொல்ல, நவீனின் தாயும் “தம்பி அவையை அனுப்பிப்போட்டு வந்து குளிக்கட்டன்” என்று சொன்னதுமில்லாமல் “நீங்கள் என்னொருநாள் வந்து ஆறுதலாக கதையுங்கோவன்” என்றதும் வேணு ஓமம்மா இன்னொரு நாளைக்கு வாறம் என்றபடி எழ, கலாவும் எழும்பவேண்டியதாகிவிட்டது.

 

**********************************************************************************************************

பிள்ளைகள் இருவரிலும் நவீன் உயிரையே வைத்திருக்கிறான். மூத்த மகன் பள்ளி செல்லும் வரையிலும் மதுவுக்கு எல்லா உதவிகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தது  நவீன்தான். அவனின் பெற்றோர் அங்கு வருவதற்கு முன்னர் அவன் இன்னொரு குடும்பத்தினருடன் தான் ஒரு அறையில் வசித்தான். அவர்களே இரண்டு நேர உணவும் கொடுத்து அவனை குடும்பத்தில் ஒருவானாக நடத்தினர். அவர்களின் இருகுழந்தைகள் கூட மாமா மாமா என்று இவனுடன் மிகவும் இயல்பாகப் பழகுவதில் இவன் தனிமையை உணர்ந்ததுக்கூட இல்லை. அவர்களைவிட இன்னும் இரண்டு நண்பர்களின் குடும்பங்களும் இருந்ததில் அவன் பொழுது மதுவைத் திருமணம் செய்த பின்னரும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.    

இப்ப ஒரு ஆண்டாக அவனுக்கும் வேலை வேறு இடத்தில். போவதற்கும் வருவதற்குமே இரண்டுமணிநேரம் எடுப்பதாக சொல்லிச் சலித்துக் கொண்டாலும் இவளும் கார் எடுத்தபடியால் இவளே பிள்ளைகளை நேசறிக்கும் பள்ளிக்கும் ஏத்தி இறக்குவதில் இவள் நேரம் போய்விடுகிறது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்  பிறந்தபின் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்று இவள் வேலையை விட்டுவிட்டாள். இப்ப அவர்கள் பள்ளிக்குச் செல்வதால் அவள் மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என எண்ணி அவள் இணையவெளியில் தேடி ஒரு தனியார் வைத்திய நிலையத்தில் வரவேற்பாளராக வேலையைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்து நவீனுக்கு போன் செய்ய எண்ணி போனை எடுத்தால் அவன் போன் நிறுத்திவைக்கப்பட்டிருக்கு. சரி அவனுக்கு வேலையில் பிஸி போல என்று எண்ணியபடி தன் காரில் ஏறி அமர்ந்து அதை செலுத்தத் தொடங்குகிறாள்.

மூன்று சந்திகள் கூடுமிடத்தை அடைந்து பச்சை விளக்குக்காய் காத்திருக்கிறாள். இவளின் முன்னே நான்கு கார்கள் நிற்க அந்தச் சுழற்சி வீதியில் பல கார்கள் வந்து வளைந்து செல்ல, இது நவீனின் கார் போல இருக்கே. பக்கத்தில் கலா இருக்கிறாள். என்ன நடக்குது/ இவர் எனக்கு ஒன்றும் சொல்லாமல் எதுக்கு அவளை ஏற்றிக்கொண்டு போறார் என்று எண்ணியபடி உடனே மீண்டும் அவனுக்கு போன் செய்ய அது அப்பவும் நிறுத்திவைக்கப்பட்டிருக்க மதுவின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைகிறது.

சைக் எனக்கு முன்னால் வாகனம் இல்லாவிட்டால் பின்னால் போய் பார்த்திருக்கலாம். சீச்சீ நவீன்  அப்படிப்பட்டவர் இல்லை என்று மனம் கூறினாலும் நிலைகொள்ளாமலும் அவன் வீடுவந்து சேரும்வரை தவித்ததுதான். அவளுக்கு வேலை கிடைத்த மகிழச்சியே தொலைந்துபோயிருக்க இரவு அவன் வீடுதிரும்பும் வரை ஒரு வாய் உணவுகூட உள்ளே செல்ல மறுத்தது.

 

வழமைக்கு மாறாக ஒரு மணிநேரம் பிந்தித்தான் அவன் வந்திருந்தான். அவள் அவசரப்படாமல் அவனுக்கு உணவைப் பரிமாற அவனும் உண்டுமுடித்துக் கைகழுவி வருமட்டும் பொறுமை காக்கிறாள்.

- ஏன் நவீன் இண்டைக்கு லேட்?.

- கொஞ்சம் வேலைகூட. அதுதான் முடிச்சிட்டு வந்தனான்.

- நான் பதினொரு மணிக்கு உங்களுக்கு மூன்றுதரம் போன் செய்தனான். சுவிச் ஓஃப் என்று   சொல்லிச்சு.

- போன் அடிச்சனீரே. இரவு நான் சார்ச் போட மறந்திட்டன்.

- பதினொரு மணி போல சட்டன் சிற்றிப்பக்கம் வந்தீங்களா?

- ஓம் மது. உவன் வேணு போன் செய்து கலாவுக்கு கொஸ்பிற்றல்ல ஒரு அப்பொயின்ற்மென்ட் இருக்கு. ஒருக்காக் கூட்டிக்கொண்டு போய் விடுறியோ எண்டு கேட்டவன். அவன் ஏதோ அலுவலா மன்சஸ்ரர் போகவேண்டி வந்திட்டுதாம். நான் முதல்ல மாட்டன் எண்டுதான் சொன்னனான். அவன் டேய் மச்சான் கெல்ப் பண்ணடா எண்டு கெஞ்சினதாலதான் வேற வழியில்லாமல் ஓம் எண்டனான்.

- ஏன் கலா சின்னப் பிள்ளையே? அவவுக்குத் தனியப் போக ஏலாதாமா?

- நான் நெடுகவே கூட்டிக்கொண்டு போறன். ஒருக்காக் கேட்டான். மறுக்க முடியேல்லை.

- போனுக்கு சார்ச் இல்லை எண்டு சொன்னியள். எப்பிடி வேணு போன் செய்தவர்?

- அவன் விடிய போன் செய்த உடனதான் போன் நிண்டது. அவன்ர வீடு தெரிஞ்சதால அவன் இத்தனை மணிக்கு எண்டதும் நான் புறப்பட்டிட்டன். என்னை நீர் சந்தேகப்படுறீரோ?

- நான் உங்களை சந்தேகப்படேல்லை. ஆனால் உப்பிடி இனிமேல் யாரையும் உங்கட வாகனத்தில ஏத்திக்கொண்டு திரியவேண்டாம். எனக்கு அது பிடிக்கேல்லை.

- சரியெடா செல்லம். இனிமேல் உம்மைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டன்.

- எனக்கு வேலை கிடைச்சிருக்கு. காலை ஒன்பதில் இருந்து பன்னிரண்டு வரை. அந்த நேர்முகத் தேர்வுக்குப் போட்டு சிக்னலில நிக்கேக்குள்ள தான் உங்களைக் கண்டனான்.

- ஓ செல்லத்துக்கு வாழ்த்துகள். நீர் கட்டாயம் வேலைக்குப் போகவேணும் எண்டு இல்லை மது. என்ர சம்பளம் தாராளமாய்க் காணும்தானே.

- எனக்கு வீட்டில இருக்க போரடிக்குது. பிள்ளையளைப் பள்ளிக்கு விட்டிட்டு நான் சும்மாதானே இருக்கப்போறன். வேலைக்குப் போனால் மனதுக்கு இதமாய் இருக்கும்.

உமக்கு வேலைக்குப் போறது மகிழ்ச்சி எண்டால் நான் தடுக்கேல்லை. என்ஜோய் என்கிறான்.         

- மதுவுக்கு அவனைப்பார்க்கப் பாவமாக இருக்கு. அவர் எனக்குப் பொய் சொல்லேல்லை. நான் கேட்டது ஓம் என்று சொல்லிட்டார். நான் தான் அவரை வீணா சந்தேகப்பட்டிட்டன் என மனதுள் எண்ணியபடி அவனுடன் செல்கிறாள்.

- நல்ல காலம் நான் மதியம் கலாவைக்கூட்டிக்கொண்டு போனது மதுவுக்குத் தெரியாது என எண்ணி இல்லை என்று பொய் சொல்லியிருந்தால் நல்லா மாட்டுப்பட்டிருப்பன். கடவுள்தான் என்னைக் காத்தது என மனதுள் எண்ணிக் கொள்கிறான்.

 

*********************************************************************************************************************

 

அதன் பின் நான்கைந்து மாதங்கள் எல்லாமே மகிழ்வாய்தான் போய்க்கொண்டிருந்தன. அவளும் வேலை பிள்ளைகள் சமையல் என பிஸியாகிவிட ஒருநாள் வேலை முடிந்து வரும்போது உணவுப்பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் செல்லும்போது நவீனின் இன்னொரு நண்பனின் மனைவி சுகியை கடை வாசலில் பார்க்கிறாள். இருவரும் சுகநலம் விசாரித்தபின் “நான் கேட்கிறேன் என்று குறை நினைக்காதையும். எனக்கு உம்மைக் கண்டபிறகு சொல்லாமலும் இருக்கமுடியேல்லை” என்கிறாள் சுகி.

“புதிர் போடாமல் விஷயத்தைச் சொல்லும்” என்கிறாள் மது சிரித்தபடி.

“உமக்கும் நவீனுக்கும் ஏதும் பிரச்சனையா”

“இல்லையே. ஏன் அப்பிடிக்க கேட்கிறீர்”

“சுதனும் நானும் இரண்டுதரம் இதுபற்றிக் கதைச்சனாங்கள். ஆனாலும் என்ன எண்டு தெரியாமல் உம்மோடை கதைக்கிறது எண்டு நான் பேசாமல் விட்டிட்டன்”.

“ஐ”யோ எனக்கு டென்சனாக்குது. முதல்ல என்ன எண்டு சொல்லும்”

எனக்கு வேணுவின் வைஃப் கலாவைப் பிடிக்கிறேல்லை. ஆனால் அதுக்காக நான் இதைச் சொல்லேல்லை”

“என்ன விசயம்எண்டு சொல்லாமல் என்ன பீடிகை. நேரா விசயத்தைச் சொல்லும்”

“சுதன் இரண்டுதடவை கலாவையும் நவீனையும் கண்டவராம். ஒருக்கா சொப்பிங்க் மோலுக்குள்ள, மற்றத்தரம் பக்கத்து சிற்றியில் உள்ள உணவகத்தில, நவீனைக் கேட்டவராம். அவர் ஏதோ சாக்குப்போக்குச் சொன்னவர் எண்டு சுதன் சொல்ல நீங்கள் உங்கட அலுவலைப் பாருங்கோ என்று நான் சொல்லீற்றன்”

“ஓ அப்பிடியே. சிலவேளை வேணு கேட்டால் கூட்டிக்கொண்டு போறவர்தான். எனக்கும் சொல்லுறவர்”

“எனக்கு ஒண்டும் இல்லை மது. வேணு நல்லவர்தான். ஆனால் கலா சரியில்லை. எதுக்கும் கவனமா இருங்கோ. உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன். நான் வாறன்”

சுகி சென்றபின்னும் மதுவால் அந்த இடத்தை விட்டு நகர விடாமல் கால்கள் இறுகிப்போயின. அடி வயிற்றிலிருந்து எதுவோ உருண்டு பிரண்டு நெஞ்சில் வந்து அடைத்ததுபோல் இருக்க சுவாசத்தை ஐந்துமுறை ஆழமாக இழுத்து காற்றை உள்வாங்கி வெளியே விட மனது சிறிது தளர்ந்ததுபோல் இருக்க, திரும்ப வீட்டுக்குப் போவோமா என எண்ணியவள் வேண்டாம் வந்த அலுவலை  முடித்துவிட்டே செல்வோம் என மனதை ஒருநிலைப்படுத்தியபடி கடைக்குள் செல்கிறாள். 

வீட்டுக்கு வந்தபின் பொருட்களை அந்தந்த இடத்தில் அடுக்கி வைத்தபின் மனதைக் குவித்து அவசரப்படவோ கோபப்படவோ கூடாது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் முன்னர் இவள் குழந்தை வயிற்றுடன் இருந்தபோது இவளின் பாதுகாப்புக் கருதி இவள் போனிலும் தன் போனிலும் நவீன் லைப் லொகேஷன் போட்டிருந்தான். குழந்தைகள் வளர்ந்தபின் தேவையில்லை என அதை இவளே நிறுத்தி வைத்திருந்தாள்.

மாலையில் அவன் வீட்டுக்கு வந்தபின் குளித்துவிட்டு வந்துதான் பிள்ளைகளுடன் விளையாடுவான். வெளியில் பல இடங்களுக்கும் செல்வதனால் பிள்ளைகளுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது என்பான். அத்தனை கவனம் குடும்பத்தின் மேல். அவன் வாங்கிக்கொண்டு வரும் சொக்ளற் மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்காக மட்டுமன்றி அவனிடமுள்ள அதீத விருப்பத்தில் எப்ப அப்பா வருவார் என்று இரு குழந்தைகளுமே தாயைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இன்று அவன் வந்ததும் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாது குளிச்சிட்டு வாங்கோ என்று துவாயைக் கொடுத்துவிட்டு அவன் உள்ளே சென்றதும் அவனது போனை எடுத்து லைப் லொகேசனை அக்ரிவ் ஆக்கிவிட்டு திரும்ப வைத்துவிட்டு இருந்துவிட்டாள். அவனுடன் எதுவுமே நடக்காததுபோல சிரித்துக் கதைத்துவிட்டு தான் எத்தனை பொறுமையுடன் நவீனின் விடயத்தை கையாளக்கிறேன் என்று தன்னைத்தானே மனதுள் மெச்சிக்கொள்கிறாள்.

 

அடுத்து இரண்டு நாட்கள் கண்காணித்ததில் அவன் வீட்டுக்கும் வேலைக்குமாகத்தான் செல்வது தெரிய சுகியின் கதையைக் கேட்டு நான்தான் வீணாக நவீன் மேல் சந்தேகப்பட்டுவிட்டேனோ என்ற சந்தேகம் கூட எழுகிறது  அவளுக்கு. ஆனால் மூன்றாம் நாள் மதியம் அவனின் கார் வேணுவின் வீட்டு லொகேசனில் நிற்பது தெரிய மனதில் இனம்புரியாத குழப்பமும் கோபமும் எழுந்ததுதான். ஆனாலும் அங்கு வேணுவிடம் கூடப் போயிருக்கலாம் என்ற எண்ணம் எழ பதட்டப்படாது தொடர்ந்தும் கவனிக்கலானாள். அடுத்த இரண்டு நாட்கள் எதுவுமற்றுக் கழிய அதற்கு அடுத்தநாள் வீட்டில் இருந்து புறப்பட்ட கார் நேரே வேணுவின் வீட்டுக்குச் சென்றது மட்டுமன்றி கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அந்த இடத்திலேயே நிற்க, இவளின் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.

அவசரப்பட்டு அவனை எதுவும் இப்ப கேட்டுவிடக் கூடாது என எண்ணியவள், அதற்கேற்றாற்போல் தன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படாதவாறு  பார்த்துக்கொண்டாள். நவீனைக் கவனித்ததில் அவன் சாதாரணமாகத்தான் இருக்கிறான். ஆனாலும் யாரையும் நம்பமுடியாது என அவள் மனம் சொல்ல, தொடர்ந்தும் கண்காணிக்க இரு வாரங்களாக மதிய நேரத்தில் அவனின் கார் வேணுவின் வீட்டுக்குச் செல்வதும் போவதுமாக இருக்க இன்று அவனை அதுபற்றிக் கேட்பதென முடிவெடுத்துக் காத்திருக்கிறாள்.

வழமைபோல் அவன் குளியல் அறைக்குச் செல்ல அவனின் போனை எடுத்து லைப் லொகேசனை நிற்பாட்டிவிட்டு அவன் கதைத்த தொலைபேசி இலக்கங்களை பார்த்தபோது பெயர் இல்லாது ஒரு தொலைபேசி இலக்கம் பல தடவை அவனுக்கு வந்திருக்க, அந்த இலக்கத்தை அழுத்தி யார் என்று கேட்போமா என இவள் நினைத்த வேளை மீண்டும் அந்த போன் உயிர்பெற கலோ என்று பெண் குரல் ஒன்று கேட்கிறது. உடனே யார் நீங்கள் என்று கேட்போமா என்று எண்ணியவள் வேண்டுமென்றே மௌனம் காக்க, அந்தபக்கம் போன் கட்டாகிவிட இவள் போனை வைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றுவிடுகிறாள். 

நவீன் உணவு அருந்தி முடிய பிள்ளைகளுடன் விளையாடி அவர்களும் களைப்புடன் தூங்கச் சென்ற பிறகு என்ன நவீன் வேணு வீட்டுக்கு அடிக்கடி உங்கட கார் போய்வருதாம். சிலபேர் பார்த்திட்டு எனக்கு போன் பண்ணிச் சொல்லிச்சினம் என்கிறாள்.

அவனின் கண்களில் ஒரு திடுக்கிடல் தெரிய உடனேயே தன்னை இயல்பாக்கிக்கொண்டு அவனும் நானும் ஒரு புரொஜெக்ட் சேர்ந்து செய்யிறம். அதுதான் அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்குச் செல்லவேண்டியதாப் போச்சு என்கிறான். ஒ அப்பிடியா என்றுவிட்டு அவள் ஏதும் பேசவில்லை. உங்கள் போன் றிங் பண்ணினது. துவா எடுத்திட்டா. ஏன் அப்பாவின் போனை எடுத்தீங்க என்று அவவை ஏசீற்று இனிமேல் எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறன். சொல்லிவிட்டு கட்டிலில் அமர அவன் பதைப்புடன் போனை எடுத்துப் பார்த்துவிட்டு, புது இலக்கமாக இருக்கு. யார் என்று தெரியேல்லை. காலமைதான் அடிச்சுப் பார்க்கவேண்டும் என்கிறான். அந்த இலக்கத்தில் இருந்து பலதடவைகள் போனில் பேசப்பட்டிருப்பது தனக்குத் தெரியாது என்று நினைத்துக் கூறுகிறான்.   தீர விசாரிக்காது கதைப்பது சரியல்ல என எண்ணி மனதை அடக்கியபடி அடுத்தநாள் விடியலுக்காகக் காத்திருந்தாலும் எப்படி அதை அறிந்துகொள்வது என்று மனம் விடாப்பிடியாக யோசிக்க அவளுக்கு ஒரு வழி புலப்படுகிறது.

காலை எழுந்து இயல்பாக எல்லாவற்றையும் செய்து நவீனுக்கு உணவும் கட்டிக் கொடுத்து அவனுக்குத் தெரியாமல் வேணுவின் தொலைபேசி இலக்கத்தை எடுத்துவிட்டு மீண்டும் தொலைபேசியை அவன் வைக்குமிடத்தில் வைத்து சிரித்த முகத்துடன் அவனை வழியனுப்பி வைத்துவிட்டு யன்னலில் நின்று அவன் போவதை உறுதி செய்துவிட்டு உடனே வேணுவின் இலக்கத்தை அழுத்துகிறாள்.

மூன்று நான்கு தடவை போன் அடிக்கும் சத்தம் கேட்டும் அவன் எடுக்கவில்லை. விடாமல் தொடர்ந்தும் அடித்துக்கொண்டிருக்க மூன்றாம் தரம் தொலைபேசி எடுக்கப்பட்டு கலோ என்று கிணற்றுக்குள் இருந்து கதைப்பதுபோல் குரல் கேட்கிறது.

“வேணுவா கதைக்கிறீர்கள்?.

“ஓம் நான்தான் நீங்கள் யார்?

“சொறி நீங்கள் இன்னும் எழும்பவில்லைப் போல. நான் நவீனின் வைஃப் மது”

“ஓ ஓ சொறி போனில் நாங்கள் கதைக்காதபடியால் உங்கட குரல் விளங்கேல்லை. ஏதும் அவசரமோ?

“உங்கட வைஃப் கலாவிட போன் நம்பர் வேணும்”

“ஓ நான் உங்களுக்குப் போட்டுவிடுறன். நவீன் உங்களுக்குச் சொல்லேல்லையா? நான் இப்ப ஒரு வாரமாக் கனடாவில நிக்கிறன். நாளையிண்டைக்கு வந்திடுவன்”

“எனக்கு அவர் சொல்ல மறந்திட்டார். சரி நீங்கள் போட்டுவிடுங்கோ”

போனை வைத்தவுடன் அவளுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று புரிய நெஞ்செங்கும் எரிகிறது. நவீன் நல்லவர்தான். அந்தக் கலாதான் வலியப் போய் அவர் மனதைக் கெடுத்திருப்பாள். அவசரப்படவே கூடாது. இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இரு என மனம் கூற என்ன செய்வது என்று பலவாறு யோசித்தும் விடை கிடைக்காது பிள்ளைகளை எழுப்பி அவர்களுக்கு எல்லாம் செய்து பள்ளிக்குக் கொண்டுசென்று விட்டபின் தன் வேலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துவிட்டு வந்து கட்டிலில் சரிய, கோகிலா அக்கா தொலைபேசியில் அழைக்கிறார்.

ஆரம்பத்தில் நவீன் இந்தக் கோகிலா குடும்பத்துடன் தான் வசித்தது. குழந்தைகள் பிறந்தபின்னர் அவர்கள் வீட்டுக்குப் போவது குறைந்தாலும் அவர்களுடனான உறவு பலமாகவே இருந்தது. நாளை அவர்கள் மகளுக்குப் பிறந்தநாள். அதனால் மாலை அந்நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள் என்று உரிமையுடன் கோகிலா அழைக்க சரி என்கிறாள். நவீன் வந்தவுடன் கோகிலா அக்காவின் அழைப்பு பற்றிக் கூற முதலில் ஏதோ எண்ணியவன் பின் “நீர் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போம். நான் வேலை முடிய அப்பிடியே வாறன்” என்கிறான்.

அடுத்தநாள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இவள் முன்னரே செல்ல அங்கு இன்னும் இவளுக்குத் தெரிந்த சிலரும் தெரியாதவர்களும் இருக்கின்றனர். மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டே அப்பப்ப தொலைபேசியில் பார்க்கிறாள். காலையில் திரும்பவும் நவீனின் தொலைபேசியில் லைஃப் லொக்கேசனை அக்ரிவ் ஆக்கியிருந்தாள். நவீனின் கார் இன்று பகல் எங்குமே செல்லாமல் நேரே வேலையிடத்துக்குச் சென்று நின்றதுதான். ஆனால் இப்ப பத்து நிமிடத்துக்கு முன்னர்தான் மீண்டும் கிளம்பி வேணுவின் வீடு இருக்கும் பக்கமாகச் செல்லத் தொடங்க இவளுக்கு மனம் பரபரப்பாகிறது.

உடனே நவீனுக்குப் போன் செய்ய நான் வேலையில் தான் நிற்கிறன். இன்னும் அரை மணித்தியாலத்தில் வந்திடுவன். நீர் போட்டீரோ என்கிறான். நான் இப்பதான் வந்தனான். எல்லாரும் வந்திட்டினம் கெதியா வாங்கோ என்றுவிட்டு மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு அரை மணி நேரம் செல்ல மற்றவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மகனிடம் “அம்மா ஒருக்கா வெளியே போட்டு உடன வாறன். தங்கச்சியைப் பார்த்துக் கொள்ளுங்கோ” என்றுவிட்டு தன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வீதியைப் பார்த்தபடி இருக்க, ஒரு ஐந்து நிமிடத்தின் பின் நவீனின் கார் வருவது தெரிகிறது.

இரவு ஏழு மணியாகிவிட்டதில் இருள் எங்கும் சூழ்ந்திருக்க கண்களைப் பூதக்கண்ணாடியாக்கிப் பார்த்துக்கொண்டே இருக்க நவீனின் காரின் பின் கதவைத் திறந்து கலா இறங்கி அக்கம்பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு கடகடவென கோகிலா அக்கா வீட்டுக்குச் செல்ல நவீன் காரிலேயே இருக்கிறான். இவள் நினைத்ததுதான் அங்கு நடந்துகொண்டிருக்க இவளும் அசையாது பார்த்துக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் நவீனும் இறங்கி உள்ளே செல்ல, இவளும் இறங்கி காருக்குள்ளேயே வைத்துவிட்டு வந்த பரிசுப் பொதியை எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறாள்.

இவளைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தவன் பிள்ளைகள் ஓடிவந்து அப்பா என்று கட்டிக்கொள்ள அவர்களைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள இவளும் வர சரியாக இருக்கிறது. சாப்பிட ஏதும் கொண்டுவரவா என்கிறாள் நவீனைப் பார்த்து. இப்ப வேண்டாம் என்று அவன் கூறும்போதே கோகிலா அக்கா பலகாரத் தட்டுடன் வந்து இவனுக்கும் கொடுத்துவிட்டு அந்தப் பக்கம் இருந்த கலாவுக்கும் கொடுக்கிறார்.

அவர்கள் இருவரையும் கண்காணித்தபடியே இவளும் இருக்கிறாள். கலாவோ அவனோ ஒருவரையொருவர் பார்க்கக்கூட இல்லை. நல்லா நடிக்கிறீர்கள் என இவள் மனம் எண்ணிக்கொள்கிறது. பிறந்தநாள் கேக் வெட்டி எல்லாரும் சேர்ந்து பாட்டுப்பாடி.. பிள்ளைகள் எல்லோரும் குதூகலமாக இருக்கின்றனர். கோகிலாவின் வீட்டு வரவேற்பறை மிகப் பெரியது. அதனால் சிறுவர்கள் எல்லோருக்கும் சங்கீதக் கதிரை விளையாட வருமாறு அழைக்க அவர்களும் ஆரவாரித்தபடி ஓடிவருகின்றனர். சிறுவர்கள் விளையாட பெற்றோர் தாங்களே விளையாடுவதாய் எண்ணி அவர்களை உற்சாகப் படுத்த விளையாட்டு சூடு பிடிக்கிறது. கடைசியில் இவர்கள் மகனே வெற்றி பெற இவள் மகிழ்ச்சியில் மகனைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறாள். நவீனும் அதையே செய்ய இவள் நிமிர்ந்து பார்க்கும்போது இவர்களையே பார்த்தபடி இருந்த கலா உடனே தலையைத் திருப்பிக்கொள்ள மதுவுக்கு சிரிப்பு வர அடக்கிக் கொள்கிறாள்.

அடுத்து “பெரியாக்களுக்கும் சங்கீதக் கதிரை உண்டு” என்று ஒருவர் கூற கோவெனச் சிலர் ஆர்ப்பரிக்க, வேண்டாம் நான் வரமாட்டான் என்றும் கட்டாயம் எல்லாரும் விளையாடவேணும் என்றும் மாறிமாறிக் குரல் ஒலிக்க ஆர்வமுள்ள பலரும் வந்து கதிரைகளுக்கு முன்னால் நிற்கிறார்கள். இவள் நவீனைப் போகச் சொல்ல நவீன் நீரும் வாரும் என்கிறான். நீங்கள் விளையாடுங்கோ. நான் வரேல்லை என்று ஒதுங்க ஆண்களும் பெண்களும் கலந்து நிற்க கலாவும் வந்து நிற்கிறாள்.

பாட்டைப் போட்டவுடன் சிறு பிள்ளைகளின் குதூகலத்துடன் பெரியவர்கள் கதிரை பிடிப்பதில் குறியாக இருக்கின்றனர். இத்தனைக்குப் பிறகுகூட மது நவீன்  வெல்லவேண்டும் என மனதில் எண்ணியபடி அவனை உற்சாகப்படுத்த பிள்ளைகளும் சேர்ந்து ஆரவாரம் செய்கின்றனர். கலா அவுட் ஆகவேணும் என மது மனதில் நினைத்தது நடக்காது கடைசியில் எல்லாரையும் பின்தள்ளி நவீனும் கலாவும் மட்டும் கதிரையை சுற்றுகின்றனர். எல்லோரும் பலமாகக் கை தட்டி ஆரவாரிக்க அவள் வெல்லக்கூடாது எனக் கடவுளை வேண்டியபடி நிற்க, இசை  நின்றுபோகிறது.

கலா கதிரையில் இருக்க எத்தனிக்க நவீன் அவளைத் தள்ளிவிட்டுத் தான் இருக்க முயல அவளும் விடாமல் இருக்க எத்தனிக்க எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்துமுடிந்திருக்க நவீனின் மடியில் கலா இருப்பதைக் கண்ட மதுவின் தலையில் இடிவிழுந்தது போலாகி அவமானத்திலும் கோபத்திலும்  முகம் வெடிப்பது போலாகி நவீன் என்று அவள் கத்திய கத்தில் நவீன் கலாவை அணைத்துப் பிடித்தபடி இருந்த கையை அகற்ற, கலாவும் எழுந்துகொள்கிறாள். அங்கு அப்படி ஒரு அமைதி. தலை குனிந்தபடி நவீனும் செய்வதறியாது சொறி மது என்கிறான். மது இரு பிள்ளைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு விடிவிடுவென அங்கிருந்து வெளியேறி காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவள்தான். அதன்பின் நவீனை வீட்டுக்குள் விடவே இல்லை.

அதன்பின் கோகிலா அக்காதொட்டு இன்னும் சிலரும் கூட அது விளையாடும்போது வெல்லவேணும் என்று நிகழ்ந்தது. அதைப் பெரிதுபடுத்தாதேயும் என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தும் மதுவின் மனம் அசையவே இல்லை. நவீன் பள்ளிக்கூட வாசலில் வந்து நின்று இவளிடம் கெஞ்சிப் பார்த்ததும் பயனில்லை. விவாகரத்துக்குப் பதிந்து இவளின் பெண் லோயர் மேலதிக ஆதாரங்களைக் கேட்டபோதுதான் தான் அத்தனை நாட்கள் பத்திரப்படுத்தியிருந்த அவனும் கலாவும் வற்சப்பில் பரிமாறிய செய்திகளை அவளிடம் கொடுக்கிறாள்.

அவளுக்கு அவனிடமிருந்து விடுதலை கிடைத்துவிடும். ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் பிள்ளைகளை அவனிடம் விடும்படி அல்லது அவன் பார்த்துவிட்டுப் போக கோட் அனுமதிக்கும்தான். ஆனாலும் அவன் கண்ணில் படாமல் எப்படிப் பிள்ளைகளை வளர்ப்பது என்பதிலேயே அவள் சிந்தனை எல்லாம் செலவழிய அலங்கோலமாகிப் போயிருக்கும் அழகிய தோட்டத்தைப் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறாள் 

 

16.10.23  


 

மனக் குரங்கு


 

 

அம்மன் கோவில் மணி அடிக்கத் தொடங்கீட்டுது. பின்னேரப் பூசை இப்ப. விதவிதமா சீலை உடுத்திக்கொண்டு பெண்கள் போவினம். எனக்கும் கோவிலுக்குப் போக ஆசைதான். ஆனால் உந்த விடுப்புக் கேட்கிற ஆட்களுக்குப் பதில் சொல்ல எரிசல் தான் வரும். ஏதோ உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்தமாதிரி கூடிக் கூடிக் குசுகுசுப்பினம்.  மூன்று பிள்ளைகளுடன் நான் அம்மா வீட்டுக்கு வந்து பதினொரு மாதங்களாகின்றன.

நான்கு அண்ணன்களுடனும் ஒரு அக்காவுடனும் பிறந்த எனக்கு மட்டும் வாழ்வு ஏன் இப்பிடியானது. எல்லோருமே வெளிநாட்டில் இருக்க என் அவசர புக்தியால் வாழ்வு இப்பிடியாகிவிட்டதே. என்ன செய்வது? என் தலையில் இப்படி எழுதியிருக்கு என என்னை நானே தேற்றிக்கொண்டாலும் எதிர்காலம் கேள்விக்குறியோடு பூதமாய் என்னை பயமுறுத்தியபடி இருக்க வேறு வழிகள் எதுவும் தோன்றாமல் அந்த அந்திப் பொழுதின் அழகை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.

முன்பொரு காலத்தில் இந்த இயற்கையை எப்படியெல்லாம் இரசித்திருப்பேன். மறையும் கதிரவனின் அழகை இதேபோன்றோரு மண்  கும்பியின் மேலிருந்து நானும் ரவியும் இரசித்திருக்கிறோம். அதன் பின்னரும் வானில் பறக்கும் வவ்வால்களை எண்ணியபடி, நட்சத்திரக் குவியல்களை இரசித்தபடி ...........ஒரு ஆண்டு எத்தனை மகிழ்வாய்க் கழிந்தது. காதலிக்கும்போது எமக்கு ஏற்றாற்போல் இருக்கும் ஆண்கள் திருமணத்தின் பின்னர் ஏன் முற்றிலுமாய் மாறிப்போகிறார்கள்?

என் கண்களின் வசீகரிப்பில் என்னிடம் வீழந்ததாகச் சொல்லிய ரவி அங்கை ஏன் பார்க்கிறாய்? அவனை ஏன் பார்க்கிறாய்? வாசல்ல ஏன் போய் நிக்கிறாய்? அவனோடை ஏன் பல்லைக் காட்டிக் கதைக்கிறாய் என்று............. அப்பப்பா நினைக்கவே அருவருக்கும்படி என்னைக் கேள்விகளால் துளைத்ததை இப்ப நினைத்தாலும் கோபம் தான் எனக்கு வருது. ரவியின் அக்கா கூட ‘’மதுமிதாவை ஏன் சந்தேகப்படுறாய். உந்தக் குணத்தை மாத்திக்கொள்’’ என்று எத்தனையோ தடவை சொல்லியும் அவர் திருந்திறமாதிரித் தெரியேல்லை. தனியாகக் கடைகளுக்குப் போகக் கூட அனுமதி இல்லை. எப்போதும் அவர் சொல்வதைக் கேட்டு, என்ன சொல்வாரோ என்று பயந்து பயந்து, அவர் விரும்பிறமாதிரி உடை உடுத்தி.......அவர் விரும்பிறதை மட்டும் செய்து ஒரு பவுடர் போட்டாலும் ஆரைப் பார்க்கப் பவுடர் போட்டுக்கொண்டு வெளிக்கிடுறாய் என்று.........ஒரு ஆடையைக் கூட ஆசைப்பட்டுக் கட்ட முடியாமல்......போதும்போதும் என்னுமளவு எல்லாக் கொடுமையும் அனுபவித்தாச்சு.

அதுக்குப் பிறகுதான் இனியும் அவரை சகிச்சுக்கொண்டு சேர்ந்து இருக்கிறது முடியாது என்று தனிய வந்து விவாகரத்துக்குப் போட்டது. சின்னனில இருந்தே உனக்குப் பிடிவாதம் அதிகம். கொஞ்சம் அனுசரிச்சுப் போனால் என்ன என்னும் அம்மாவுக்குப் பதில் சொல்ல எனக்கு முடியேல்லைத்தான். “’எங்களைக் கேட்காமல் உன்ர எண்ணத்துக்கு புருசனை விட்டிட்டு வந்திட்டாய். மூண்டு பிள்ளையளை வச்சுக்கொண்டு என்ன செய்யப்போறாய்” என்று இரு அண்ணன்களும் கேட்டாச்சு. எனக்கு முதல் பிறந்த அண்ணாதான் என்னோடை ஒட்டு. மாதாமாதம் ஒரு ஐம்பதாயிரம் அண்ணிக்குத் தெரியாமல் அனுப்பிக்கொண்டிருக்கிறார். 

அந்த பெண் வக்கீல் கூட”உமக்கு மூன்று பிள்ளைகளையும் வைத்திருக்க முடியுமா என்று கேட்டதுக்கு “என்னால் பிள்ளைகளைத் தனிய வளர்க்க முடியும்” என்று வீம்பாகக் கூறினாலும் அது எத்தனை பெரிய துன்பம் என்று எனக்கு போகப்போகத்தான் விளங்கத் தொடங்கிச்சிது. அதுக்காக திரும்ப ரவியோடை போய் சேர்ந்து வாழவே முடியாது. இன்னும் ஒரு வருடம் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கத்தான் வேணும் விவாகரத்துக் கிடைப்பதற்கு. அதுவரை அண்ணன் இருக்கிறார்தானே என்னைப் பார்த்துக்கொள்ள. நானே என்னைத் தேற்றிக்கொள்கிறேன்.

பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். அம்மா வெங்காயத்தை உரிச்சு வையுங்கோ என்று சொல்லிவிட்டு நான் கூடையை எடுத்துக்கொண்டு பிரான்சில் இருக்கும் அக்கா எனக்கு அனுப்பிய இரண்டரை இலட்சத்தில் வாங்கிய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்புகிறேன். போகும்போது தெரிஞ்ச சிலர் தலையாட்ட சிலர் பார்க்காதவாறு செல்வது மனதுக்குள் கோபத்தை வரவளைத்தாலும் அதை அடக்கியபடி நான் கடந்து செல்கிறேன்.

பக்கத்தில் சில சிறிய கடைகள் இருக்குத்தான். அம்மா கூட “உதில பக்கத்தில வாங்கிறதுக்கு எதுக்கு இப்ப அங்கை போறாய்” என்று என்னை வீட்டில் நிறுத்தி வைக்கப் பார்த்தாலும் நான் கேட்பதில்லை. பல நேரங்களில் பெண்களுக்குப் பெண்களேதான் எதிரிகள். நான் எதுக்கு மற்றவைக்குப் பயந்து வீட்டிலையே கிடக்கவேணும். எந்தக் காலத்தில இருக்கிறா அம்மா என எனக்குள் எண்ணிக் கொள்வேனே தவிர அவவுக்குப் பதில் எதுவும் கூறுவதில்லை. சரியான அமசடக்கி என்று அம்மா முணுமுனுப்பதும் கேட்பதுதான். ஆனாலும் அதற்கும் பதில் சொல்லாது சிரித்துவிட்டு என் அலுவலில் கண்ணாய் இருப்பதை வழமையாக்கிக் கொண்டேன்.

அன்று கொஞ்சம் பிந்திவிட்டது. சில மரக்கறிகள் முடிந்துபோய் இருக்கும். ஆனாலும் சிலது மலிவாயும் கிடைக்கும். நான் வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாய் முறித்துப் பார்த்துத் தட்டில் போட்டுவிட்டு நிமிர்ந்தால் என்னருகில் ஒருவர் என்னையே பார்த்துக்கொண்டு நிற்க எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்று புரிந்துகொண்டு “நான் தயாளன். சிதம்பரியின் மகன். கனடாவில இருக்கிறன்” என்று தானாகவே அறிமுகம் செய்கிறார். எனக்கோ பார்த்த முகமாய்ததான் இருந்தாலும் நினைவு வரவில்லை. அதை அவரிடமே சொல்கிறேன்.

“நீங்கள் முந்தியும் எங்களைக் கணக்கில எடுக்கிறேல்லை. அப்ப எப்படித் தெரியும்” என்கிறார். “இதென்ன தேவையற்ற குற்றச்சாட்டு” என்றபடி வெண்டைக்காய்க்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவருடன் கூடவே  நடக்கிறேன். “நீங்கள் பள்ளிக்கூடம் போகேக்குள்ள நான் எத்தினை நாள் உங்களுக்குப் பின்னால திரிஞ்சனான்” என்று ஒருவித மனத்தாக்கலுடன் சொல்ல எனக்கு நினைவு வருகிறது. யாரை மறந்தாலும் எமக்குப் பின்னால் திரிஞ்சவர்களை மறக்காதுதானே.

லேடீஸ் கொலிச்சில் படித்த எனக்கு அப்போதெல்லாம் எம்மூரவர்கள் பெரிதாய்க் கண்ணுக்குத் தெரிவதில்லை.

நீங்கள் எங்க படிச்சனீங்கள்?

அவர் சொன்ன பள்ளிக்கூடம் எம்மூரில் தான் இருந்தது. அதனால் நான் அவரை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லைத்தானே என மனம் சமாதானம் சொல்ல “கனடாவில் இருந்து எப்ப வந்தீர்கள்? எத்தனை குழந்தைகள்” என்று கதையைத் திசை திருப்புகிறேன்.

 

“எனக்கு சந்திராவைப் பேசித்தான் செய்தது. நான் முதல்முதல் அவவைப் பார்க்கப் போகேக்குள்ள அவ சாதாரணமாத்தான் இருந்தவ. இரண்டு ஆண்டுகள் தான் சந்தோஷமான வாழ்க்கை. கொஞ்சநாள் போகத்தான் தன்பாட்டில கதைக்கிறதும் வெறிக்கவெறிக்கப் பாக்கிறதும் ஏதோ தன்னுக்குள்ள பேசுறதும்...........நானும் குணமாகிவிடும் எண்டுதான் பொறுத்துக்கொண்டு இருந்தன். சமையல் சாப்பாடெல்லாம் மாமிதான். இந்தியாவுக்குக் கொண்டு போய்கூட வைத்தியம் பார்த்தும் சரிவரேல்லை. கடைசியில நோய் முத்திப்போய் உடுப்புகளை கழட்டி எறிஞ்சிட்டு  அம்மணமா நிக்கத் தொடங்க, மாமா மாமிதான் நீங்கள் இவ்வளவு காலம் துன்பப்பட்டது போதும் எண்டு சொல்லி விவாகரத்தும் எடுத்துத் தந்தவை. பாவம் நல்ல ஜீவன்கள். அதுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் ஓடிப் போச்சு. நானும் இப்பிடியே இருந்திட்டன். அப்பப்ப அம்மாவைப் பார்க்க இங்க வருவன்” என்று தயாளன் சொல்ல எனக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறதோட மட்டுமில்லாமல் நெஞ்சுக்கையும் ஏதோ செய்ய எப்பிடி ஆறுதல் சொல்லுறது எண்டு தெரியாமல் அவர் சொல்லுறதைக் கேட்டுக்கொண்டிருக்கிறன்.

அதன்பின் நாங்கள் இருவரும் அடிக்கடி பொது இடங்களில் சந்திக்கவும் மணிக்கணக்கில் கதைக்கவும் தொடங்கி அவர் கனடா போனபின்னும் தொடர்ந்து போனில வற்சப்பில எண்டு ஒருநாள் விடாமல் விவாகரத்து கிடைக்கும் வரைக்கும் கதைத்துக்கொண்டே இருந்தம். அதுக்குப் பிறகுதான் என்  வாழ்க்கையில் மீண்டும் வசந்தகாலம் ஆரம்பிச்சது. 

 

   *******************************************************************************************************

பார்க்கும் இடமெங்கும் வெள்ளைவெளேர் என்று பூம்பனி நிறைந்திருக்கு. சொல்வதற்கும் பார்ப்பதற்கும்தான் பூம்பனி அழகானது. ஆனால் கொடும்பனி என்றுதான் நான் சொல்வேன். பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பனித்துகள்கள் தாங்க முடியாத குளிரை ஏற்படுத்துகின்றன. பனி இறுகி எத்தனை விபத்துக்களை உண்டுபண்ணுகின்றன. என்னதான் குளிர் ஆடைகளை அணிந்து வெளியே சென்றாலும் கிடுக்கிடுத்து நடுங்க வைக்கின்றன. சில மனிதர்களும் இப்படித்தான். பார்க்க மிகவும் நல்லவர் போலத் தான் தெரிவார்கள். அவர்களோடு நெருங்கிப் பழகிய பின்னர்தான் அவர்களின் உண்மை மனநிலைகளை அறிந்துகொள்ள முடிகிறது. சாளரத்தினூடாக வெளியே பார்த்துக்கொண்டு நின்ற என்னால் பனிப்பொழி  வின் அழகை தொடர்ந்தும் இரசிக்க முடியவில்லை.

 நான் கனடா வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு விரைவாக ஓடிப்போகுது காலம். இப்பதான் என்னால என் பிள்ளைகளில் இருவரை கனடாவுக்கு எடுக்க முடிந்தது. மூத்தவனுக்கு பதினாறு வயதானபடியால் அவனை மட்டும் எடுக்க முடியவில்லை. அவன் இப்ப ரவியுடன்தான் இருக்கிறான். என்னதான் இருந்தாலும் பிள்ளைகளை விட்டுவிட்டு கனடா வரமுடியாதுதானே. அம்மாவும் எத்தனை நாள்தான் பிள்ளைகளைத் தனியாக வளர்க்க முடியும். நான் ரவியின் தமக்கையுடன் கதைத்ததும் எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது. அவவே தான் பிள்ளைகளை நான் பார்த்துக்கொள்ளுறன், நீர் போம் என்று சொன்னதால்தானே நான் நின்மதியாய் இங்கு வரவும் இருக்கவும் முடிந்தது. வருவதற்கு முன்னர் விவாகரத்தும் கிடைத்ததுதான் என் அதிட்டம்.

எப்படியும் ஒரு ஆறு மாதங்களுள் மூத்தவனையும் கூப்பிட்டிடுவன். அதுவரை பொறுமையாய்த்தான் இருக்க வேணும். ரவிகூட இப்ப எவ்வளவு மாறிவிட்டார். முன்னர் என்னை எப்படி எல்லாம் சந்தேகப்பட்டார். இப்ப அதை உணர்ந்து அதுக்கெல்லாம் எத்தனைதரம் மன்னிப்புக் கேட்டிட்டார். மன்னிக்கிறதுதானே மனித மாண்பு. அதை விளங்கிக் கொள்ளாமல் “எதுக்கு ரவியோடை அடிக்கடி கதைக்கிறாய்” என்று ஏசும் தயாளனுக்கு எப்பிடி விளங்கப்படுத்திறது என்றே தெரியாமலிருக்கு. ஐந்து ஆண்டுகள் கணவனாய் வாழ்ந்தவர் என்று ஏன் தயாளனுக்குப்  புரியுதில்லை. வெளிநாடுகளில் பிரிந்த கணவனும் மனைவியும் சுமுகமாகப்பேசிக் கொள்வது இயல்புதானே என்று அவருக்குச் சொன்னாலும் நாங்கள் வெள்ளைக்காரர் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

எப்படியோ மன நின்மதியான இந்த வாழ்வு தயாளனால்தான் என நன்றியோடு எண்ணிப்பார் என உள்மனம் அடிக்கடி சொல்லும்போதெல்லாம் எனக்கு ஏற்படும் ஆயாசத்துக்கு அளவே இல்லை.

 

 

நான் கனடா வந்தபின் வேலைக்குப் போகும்படி தயாளன் என்னை வற்புறுத்தவில்லை. என்றாலும் அவர் வேலைக்குப் போனபிறகு வீட்டில் எட்டு ஒன்பது மணிநேரம் தனிய இருக்கவும் பிடிக்கவில்லை. தயாளனின் முதல் மனைவி இருந்த நிலையால் யாரும் அவர் வீட்டுக்கு வருவதில்லை என்று சொல்வதைவிட இவர்களே யாரும் தப்பித்தவறிக்கூட வீட்டுக்கு வாராதவாறு பார்த்துக்கொண்டனராம் என்று வேதனையுடன் தயாளன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியே ஒருவித மன அழுத்தத்துள்ளும் தயாளனும் இருந்தபடியால் யாரையும் நண்பர்கள் என்று வீட்டுக்கும் அழைத்ததில்லை. அது இப்போதும் தொடர்கிறது.

இப்ப இருப்பது ஒரு படுக்கை அறை,ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை மட்டும்தான். எங்கள் இருவருக்கும் அது போதும்தான் என்றாலும் பிள்ளைகளைக் கூப்பிட்டால் இது போதாதுதானே என நான் மட்டுமல்ல தயாளனும் யோசித்து என் பிள்ளைகளைத் தன் பிள்ளைக்களாய் எண்ணித்தான் இந்த பெரிய வீட்டை வாங்கினவர். தயாளன் தொடர்ந்து வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார். அவருக்கு நல்ல சம்பளம். என்  உடல்வாகிற்கும் முகப் பொலிவுக்கும் நகை நட்டுகள் போடாமலே அழகாய் இருப்பதால் தங்கநகைகள் கூட நான் அதிகம் வாங்கிப் போடுவதில்லை.

தயாளன் தொடர்ந்து வேலை செய்ததாலும் அவரின் முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை என்பதாலும் அவரிடம் சேமிப்பில் ஏற்கனவே இருந்த பணத்தைப் போட்டு இந்த வீடு வாங்கியது எத்தனை வசதியாக இருக்கு எங்களுக்கு .

பெரியவனுக்கும் ஸ்பொன்சர் சரிவந்திடும் என்றுதான் நம்பிக்கையாய்ச் சொல்கிறார். நான் வேலை செய்யும் பணத்தைக் கூட அவர் கேட்பதில்லை. தன் வருமானத்திலேயேதான் என் இரு பிள்ளைகளையும் கூப்பிட்டவர். இவர் என்னைக் கலியாணம் கட்டினது என் அதிட்டம்தான். இருந்தாலும் என் அழகும் ஒரு காரணம் தானே என எண்ணியதில் ஏற்பட்ட பெருமிதத்தில் கண்ணாடியின் முன் சென்று என்னை நானே பார்க்கிறேன். என்னை அறியாது என் அழகில் நானே இலயித்து நிற்கிறேன்.  

நாற்பது வயதானாலும் என் அழகு கூடியிருக்கிறதேயன்றிக் குறையவில்லை. மாருதியின் ஓவியப் பெண்ணின் உடல்வாகும் நெற்றியும் அதற்கும் மேலே தனித்துவமான உதடுகளும் புருவமும் வெள்ளை வெளேர் அல்லாமல் பளிங்குபோன்ற அந்த நிறமும் என்னை நானே பார்த்துப் பொறாமை கொள்ளவைப்பதாய் இருக்க என்னுள் சிரித்துக் கொள்கிறேன். 

திருமண வீடுகளுக்குப் போவதென்றாலோ அல்லது வேறு பொது நிகழ்வுகள் என்றாலோ எனக்குப் போவதற்கு ஒருமாதிரி இருக்கும். பெண்கள் பலரும் ஏதோ செய்யாத குற்றத்தைச் செய்ததுபோன்று என்னோடு பேசாமல் இருக்க பத்திக்கொண்டு வரும். தயாளனிடம் குறைப்பட்டுக்கொண்டபோது “அவர்களுக்கு உன் அழகின் மேல் பொறாமை. அதை இப்பிடித்தான் காட்டுவார்கள்” என்றதில் என மனமும் அமைதியானது. அதுமட்டுமன்றி பெண்கள் தான் கதைப்பதில்லையே தவிர ஆண்கள் பலரும் வைத்தகண் வாங்காமல் என்னைப் பார்ப்பதை நான் கண்டுவிட்டுத் தெரியாதமாதிரி இருப்பன்.

நான் தயாளனைக் கட்டிக்கொண்டு வந்தபிறகு என் அண்ணன்மாரும் பிரச்சனை தீர்ந்ததாக எண்ணி என்னோட கதைக்கிறதை விட்டுவிட்டார்கள். எனக்கது கவலைதான் என்றாலும் அவை ஒருத்தரும் கனடாவில் இல்லை என்றதில் சிறிது நின்மதியாகவும் இருக்கு.

 

என்ர மூத்தவனும் இப்ப கனடா வந்திட்டான். என் மனம் இப்ப எத்தனை நிம்மதியாய் இருக்கு என்று சொன்னால் உங்களுக்கு விளங்காது. பிள்ளைகள் மூவரையும்  கொலிச்சுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய்வரவே நேரம் சரியாக இருக்கு. பெரியவனுக்கு இப்ப பதினேழு வயது. கொஞ்சம் வளர்ந்தபடியாலும் தகப்பனோட இருந்ததாலும் தயாளனோடை சேருகிறானே இல்லை. இப்ப எனக்கு அதுதான் பெரிய தலையிடியாக் கிடக்கு. ரவி என்னத்தைச் சொல்லி அவன் மனதைக் கலைத்துவிட்டிருக்கிறாரோ தெரியேல்லை. வேற வீட்டை போவமென்று ஒரே கரைச்சல். சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்குப் போனால் எவ்வளவு செலவு என்று அவனுக்கு எவ்வளவு சொல்லியும் விளங்கிக் கொள்கிறான் இல்லை.

தயாளன் எவ்வளவு காசைச் செலவழிச்சு அவனைக் கூப்பிட்டவர். என்  பிள்ளைகளில அவருக்கு அத்தனை அன்பு. அவர் கதைக்கப் போனாக்கூட அவரை அலட்சியம் செய்திட்டு போயிடுறான். இப்ப நினைச்சால் அவனைக் கூப்பிடாமலே விட்டிருக்கலாம் போல கிடக்கு. ஆனாலும் அவனை மட்டும் அங்கை விட்டிட்டு நான்மட்டும் எப்பிடி நிம்மதியாய் இங்க இருக்கமுடியும்? “சொறி தயாளன்” எண்டு நான் சொன்னதுக்கு அவன் சின்னப்பிள்ளை. அதை நான் பெரிசா எடுக்கேல்லை. நீர் கவலைப்படாதையும். போகப் போக மாறிடுவான் எண்டு எனக்கு ஆறுதல் சொல்லுறார்.

இப்ப சில மாதங்களாகப் பெரியவன் ஒழுங்காப் படிக்கிறான் இல்லை. எனக்கு அவனோடை பெரிய தலையிடியாய் இருக்கு. கொலிச்சுக்கும் போகாமல் இடையிடையே கட் அடிச்சுக்கொண்டு பெடியளோடை திரியிறான் எண்டு கேள்விப்பட்ட நேரம் தொட்டு மனமெல்லாம் ஒரே சஞ்சலாமாய்க் கிடக்கு. ஊரிலை எண்டாலும் கொஞ்சம் அடக்கி வைக்கலாம். இங்க ஒண்டும் செய்ய ஏலாமல் இருக்கு. இவனை என்ன செய்யிறது எண்டுதான் எனக்கு விளங்குதே இல்லை.    

நீர் முன்னை மாதிரி இல்லை. என்னோட கதைக்கவே உமக்கு நேரம் இருக்கிறேல்லை என்ற தயாளனின் குற்றச்சாட்டுக்கும் என்ன சொல்லி அவரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் எனக்கு தலையெல்லாம் வலிக்க நான் மனச் சோர்வுடன் யோசிக்க யோசிக்க எனக்கு விடை எதுவுமே கிடைக்குதில்லை. .

நண்பிகள் என்று கூட எனக்கு ஒருத்தரும் இல்லாதது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் இந்த நேரத்தில் என் உள்ளக் கிடக்கையைச் சொல்லி ஆற முடியாமலும் இருக்கு. அக்காவிடம்தான் ஒருக்காக் கதைக்கவேணும். அவ சிலநேரம் நல்ல ஆலோசனை சொல்லுவா என எண்ணியபடி அவவுக்கு போன் செய்கிறேன்.

“உனக்கு நல்ல வாழ்க்கை ஒன்று கிடைச்சிருக்கு. தயாளன் உன்னை கனடாவுக்குக் கூப்பிடாட்டில் உன்ர நிலமை பிள்ளைகளின் நிலமை என்ன எண்டு யோசிச்சனியா? எத்தனை நாளைக்கு உனக்கு நாங்கள் காசு அனுப்பிக்கொண்டு இருக்கிறது. நாங்களும் எல்லாம் குடும்பக்காரர். கஷ்டப்பட்டுத்தானே வெளிநாடுகளில உழைக்கிறம். கடவுள் தந்த அதிட்டத்தை காப்பாற்றிக்கொள்ளப் பார். திரும்பவும் பாழும் கிணத்துக்குள்ள விளப்போறன் எண்டால் கடவுளாலகூட உன்னைக் காப்பாத்த ஏலாது”.  

அக்கா சொல்வது அத்தனையும் சரிதான். ஆனாலும் இவ்வளவு கடுமையா அவ கதைச்சிருக்கத் தேவையில்லை. அக்கா எனக்கு ஆதரவா இருப்பா என்று பார்த்தால் இப்பிடி முகத்தில அடிச்சமாதிரிச் சொல்லி இருக்கத் தேவையில்லை. ரவியோடை கதைக்கிறனான் எண்டு சொன்ன உடனையே அக்காக்கு சரியான கோபம் வந்திட்டிது.

அவரும் பாவம்தானே. என்னில அவருக்கு இன்னும் அன்பு நிறைய இருக்கு. எதை மறந்தாலும் முதல் காதல், முதல் கலியாணம் ஆருக்கும் மறக்குமே. கடவுளே ஏன் என்னை இப்பிடிச் சோதிக்கிறாய். என்னை இப்பிடி திக்குமுக்காட வச்சிட்டியே கடவுளே. என்ன முடிவை எடுக்கிறது எண்டு எனக்குத் தெரியேல்லையே. மூத்தவனோட திருப்ப ஒருக்காக் கதைச்சுப் பார்ப்பம் என்று எண்ணியதும் சிறிது நிம்மதி வருது எனக்கு.

 

 

இப்ப கொஞ்ச நாளா வானமெங்கும் ஒரே மேகமூட்டம். திட்டுத்திட்டாய் கருமேகங்கள் சூழ்வதும் குளிர் காற்று அடிப்பதும் இத்தனை ஆண்டுகளாய் இல்லாமல் இதுதான் முதல் முறை. எத்தனையோ தடவைகள் குளிர் காலங்களில் புயல்க்காத்து வீசியிருக்குத்தான். இப்போது புதிதாய் இடிமுழக்கமும் மின்னலும் சேர்ந்து பயம் கொள்ள வைக்குது. முன்புபோல் தயாளனுடன் கதைக்கவும் முடியுதில்லை. அவர் பட்டும்படாமலும் என்னோடு வாழ்வதுபோல் எனக்குத் தோன்றுவது எனது கற்பனையா என்றுகூட என்னால் உறுதியாகக் கூற முடியுதில்லை. எல்லாம் இன்னும் ஒரு வாரம்தான். அதுக்குப் பிறகு என் முடிவை நான் தயாளனுக்குச் சொல்லத்தான் போறன். தேவையான தருணத்தில சரியான முடிவை எடுத்திடவேணும். மனச்சாட்சிக்குப் பயந்து செய்யிறதா வேண்டாமா எண்டு யோசிச்சு யோசிச்சு தலையிடிதான் மிச்சம். என்ன செய்யப் போறன் நான்.

 

*********************************************************************************************************************************************************

 

தயாளன் இரண்டு நாட்களாக பிந்தி வீட்டுக்கு வாறதுமில்லாமல் என்னோட பெரிதா முகம் குடுத்துக் கதைக்கிறார் இல்லை. இண்டைக்கு அவர் வேலையால வந்த உடன ஒருக்காக கதைச்சுப்போடவேணும். கொஞ்ச நாட்களா நானும் அவரைக் கவனியாமல் விட்டிட்டன். பாவம் அவர் எனக்காக எத்தனையைச் செய்திருக்கிறார். அவரை நான் ரவியைச் சந்திக்கிறதுக்கு முன்பே கண்டிருந்தால் என் வாழ்வு வேறு விதமாகப் போயிருக்கும். சரி இப்ப அதை நினைச்சு என்ன பயன். என் விதி இதுதான் என்று இருந்திருக்கு. சரி பிள்ளைகளை எடுக்கிற நேரமாப் போச்சு. ஆனால் என்றுமில்லாமல் மனம் ஏதோ சஞ்சலப்படுறமாதிரி ஏன் இருக்கு என்று விளங்குதில்லை. சுவாமி அறைக்குச் சென்று கண்மூடி நின்றுவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு கொலிச்சுக்குப் போகக் காரை எடுக்கிறேன்.

என்ன இன்னும் தயாளன் வரேல்லை. நானும் நேரத்தைக் கவனிக்கேல்லை. இப்ப ஒரு கிழமையா பிந்தித்தான் வாறார். ஆனாலும் இண்டைக்கு இரவு பதினொன்று ஆகப்போகுது. இவ்வளவுநேரம் என்ன செய்யிறார். போனைக் கூட நிப்பாட்டி வச்சிருக்கிறாரே. எதுக்கும் காலைவரை பார்ப்பம். எனக்கும் களைப்பா இருக்கு. எதுக்கும் போய் படுப்பம்.

நான் படுக்கையறைக்கு வந்து போர்வையை எடுக்க அவர் படுக்கிற பக்கம் என்வலப் ஒண்டு தெரியிது. என்ன அது என்று பார்க்க ஆவலாய் இருக்க போய் எடுக்கிறன். மதுமிதா என்று என் பெயர் இருக்க எனக்கு மனதில் ஏதோ செய்ய அதை உடைக்கிறேன்.

“எனக்கு வாற கோபத்துக்கு உம்மை கொலை செய்திட்டு ஜெயிலுக்குப் போகலாம் போல இருந்ததுதான். ஆனால் என் நல்ல காலம் நானே என்  கோபத்தை அடக்கீட்டன். அதுக்குக் காரணம் உமது தவறுக்கு உமது பிள்ளைகளைத் தண்டிக்கக் கூடாது என்பதுதான்”

ஐயோ ஏன் தயாளன் இப்பிடி எழுதியிருக்கிறார்.. நெஞ்சு பதற நான் கட்டிலில் அமர்ந்து மிகுதியை வாசிக்கிறன்.

“நான் ஐந்து ஆண்டுகளாகப் பட்ட துன்பத்திற்கு கடவுள் எனக்குத் தந்த சிறந்த பரிசாத்தான் நான் உம்மை எண்ணினன். என் அடிமனதில உம்மேல் இருந்த காதலும் ஆசையும் நீர் கணவனை விட்டுப் பிரிந்து இருக்கிறீர் எண்டதும் மீண்டும் உயிர்த்திது. அதனால உமது பிள்ளைகளையும் என்  பிள்ளைக்களாய் எண்ணித்தான் இந்த ஐந்து ஆண்டுகளும் வாழ்ந்தனான். ஆனால் நீர் எனக்கு செய்ய நினைத்தது பெரிய துரோகம். அதைக்கூட மன்னிக்கலாம் நீர் என்னோட பேசி ஒரு தீர்மானம் எடுத்திருந்தால். ஆனால் நான் ஒருநாள் வெள்ளன வீட்டுக்கு வந்ததால உம்முடைய  சுயரூபம் தெரிஞ்சது. நான் வந்தது தெரியாமல் நீர் உம்மட முதல் கணவனோடை போனிலை கதைச்சதைக் கேட்க நேர்ந்தது என் அதிட்டம்.

நீர் உமது கணவனை ஏஜெண்ட் மூலம் கூப்பிட ஒழுங்கு செய்த விடயம் பற்றி அவனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தீர். முக்கியமாய் ஒண்டு சொன்னீர் பாரும். அதைக் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்திது. அவன் வந்த உடன அவனையும் இந்த வீட்டில கூட்டிக்கொண்டு வந்து வச்சிருக்கிறது எண்டதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் அவன் வந்ததும் கோபத்தில நானே வீட்டை விட்டுப் போயிடுவன் எண்டும் இல்லாட்டில் என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லி நீயே சொல்லுவாய் எண்டும் உன்ர முன்னாள் புரிசனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாய். நானாகப் போகாட்டில் என்னைக் கொடுமைப் படுத்திறார் என்று சொன்னால் அவங்களே என்னை வெளியேறச் சொல்வார்கள் என்று சொல்ல உன்ர புருஷன் ஒரு சிரிப்புச் சிரிச்சான் பார். அப்பதான் உனக்கு எந்த விதத்திலையாவது தண்டனை குடுக்கவேணும் என்று நான் தீர்மானிச்சது.

நீயும் பிள்ளைகளும் என்னை வா என்று சும்மாதன்னும் கேட்காமல் இரண்டு நாட்கள் எங்கேயோ போனீர்கள் எல்லோ. அன்றுதான் நான் இந்த வீட்டைப் பார்க்க ஆட்களை ஒழுங்கு செய்தது. வீடு என் பேரில இருந்தாலும் உனக்குப் பாதிப் பங்கு இருக்கு. அதனால தயாளன் என்னை எழும்பச் சொல்லேலாது என்று தினாவெட்டா அவனுக்கு நீ சொல்லிக்கொண்டிருந்தது இப்பவும் என் காதில கேட்டுக்கொண்டே இருக்கடி.

என் வீட்டை நான் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டேன். ஒரு வாரம் மட்டும்தான் நீங்கள் இங்க இருக்கலாம். அதுக்குப்பிறகு உரியவை வந்திடுவினம். உன்ர கையெழுத்து இல்லாமல் எப்பிடி விக்கலாம் எண்டு நீ யோசிக்கலாம். இரண்டு வாரத்துக்கு முந்தி வீட்டுக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறன் என்று சொல்லி உன்னட்டை சில பேப்பரில கைஒப்பம் வாங்கினது நினைவிருக்கா?? என்னை இளிச்சவாயன் எண்டு எண்ணினதால நீ ஒண்டையும் வடிவாப் பாக்கேல்லை. இதுக்குப் பிறகும் நீ வழக்கு வைக்கலாம். வாதாடலாம். ஆனால் அதையெல்லாம் பார்க்க நான் இந்த நாட்டிலையே இருக்கமாட்டான். உன்ர புருஷன் இந்த நாட்டுக்குள்ள எப்பிடி வாறான் எண்டு நானும் பார்க்கிறன். எவ்வளவு நல்லவனாய் இருந்த என்னை இப்படி மாற்றினது உன்ர துரோகம் தான். அதை நான் என் உயிருள்ளவரை மறக்கவே மாட்டன்”

பெயரே போடாமல் தட்டச்சுச் செய்யப்பட்ட கடிதம் என் கையை விட்டு தானாக கீழே விழுது. பனிப்பாறை ஒன்று என் தலைமேல் விழுந்ததுபோல் அதிர்ச்சியில் கண்களில் கண்ணீர் கட்டுமீறி வர நான் அழுத ஓலம் கேட்டு பிள்ளைகள் பதைப்புடன் எழுந்தோடி வந்து என்னம்மா நடந்தது என்று அருகில் வந்து கேட்க, எதுவும் சொல்லாமல் அழுதுகொண்டு இருக்கிறேன் நான்.           

 

  நிறைவுற்றது 

02.10,23


Monday 10 January 2022

அவனும் அவர்களும்

 


அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர்.

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண்  

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண்  டாடாண்டு டண் டண்

பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவிர என எண்ணிக்கொண்டார்.  தாளக்கட்டுப்பாட்டோட தான் மூன்றுபேரும் மேளத்தை அடிக்கினம். ஆனாலும் முன்னைய இசை எங்கோ தொலைந்து ........... சனங்களுக்கும் அதுபற்றி எல்லாம் யோசிக்க எங்க நேரம். காசைக் குடுத்துக் கடமையைச் செய்தாச் சரி என்ற மனநிலை.

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு 

டாண் டாண் டாண் டாண் டாண் டாண்

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு

முன்னரெல்லாம் செத்தவீடுகளுக்கு அடிக்கும் இசை நினைவில் வந்து மனதை நிறைக்க பெரிய பெருமூச்சு வெளிவருகிறது அவரிடம் இருந்து.

உடலை அசைக்க முடியாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் படுத்த படுக்கைதான். எட்டு மாதங்களுக்கு முதல் சைக்கிளால விழுந்து ஆஸ்பத்திரியில கொண்டுபோய் போட்டதுதான். கோதாரி விழுந்த கொறோனா அங்க தொத்தி தனி வாட்டில கொண்டேப் போட்டு ஒருத்தரும் கொறோனா வந்தவையைப் பாக்க வரேலாது எண்டுபோட்டு, “இவரைப் பார்க்க தனி ஆள் போடுவம். ஒரு நாளைக்கு 2000 ரூபா தரவேணும்” எண்டு சொன்னார்கள். அங்க போய் ஆரிட்டைக் கதைக்க முடியும்? உடனேயே வீட்டுக்காறரும் வேற வழியில்லாமல் ஓம் என்று தலையாட்ட, ஒழுங்கான சாப்பாடுகூட அவங்கள் தராமல்த்தான் நான் சரியாய் இளைச்சுப்போனன் என எண்ணியவருக்கு மானச்சாட்சி உறுத்தியது.

காலையில இடியப்பமும் சொதியும் சம்பலும் கட்டிய பார்சல் கொண்டுவந்து குடுத்தவங்கள் தானே. மத்தியானமும் இரண்டு கறியோட சோறு, இரவிலும் என்ன வேணும் எண்டு கேட்பாங்கள். சிலவேளை பக்கத்துக் கட்டில்காரர் சாப்பிடும்போது அவிச்ச முட்டை கூடக்கண்ணில் பட்டதுதான். இவர் தான் வீட்டில இருந்து சாப்பாடு வாறேல்லை என்ற கோபத்தில வேண்டாம் எண்டு தலையாட்டிவிட்டுச் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிச்சது. சாப்பிடாமல் விடவிட வயதுபோன இவரின் குடல் இன்னும் சுருங்கிப்போய் இவரால ஒழுங்காச் சாப்பிடவே முடியாமல் போச்சு.  

ஒரு மாதத்தின் பின்னர்தான் அவரை வீட்டுக்குக் கூட்டிப் போக அனுமதித்தார்கள். இவரைப் பார்த்த ஆளுக்கு வீணாக அறுபதாயிரம் கட்ட மருமகன் தான் தன் இருப்பிலிருந்த பணத்தைக் கொடுக்கவேண்டியதாகிவிட்டது. இவர் மருமகன் இவரைக் கூட்டிக்கொண்டு போக வந்து பார்த்து என்ன இப்பிடி மெலிச்சு போனார் மாமா என்று ஏங்கித்தான் போனான்.

வீட்டை போனதும் இவர் மனைவி சந்திரா ஐயோ என்னப்பா இப்பிடி ஆயிட்டிங்களே என்று கத்திக் குளறி அழ, மாமி அவருக்கு வருத்தம் இல்லை மாமி. நீங்கள் அழுது அவரைப் பயப்படுத்தாதேங்கோ எண்டதோடை மகள்களின் சத்தம் வராத அழுகையும் நிண்டு போச்சு.  

வெளிநாட்டில இருக்கிற இவற்றை மருமகன் அனுப்பின காசில உயத்திப் பதிக்கிற கட்டில் வாங்கி அவரை அதில கிடத்திச்சினம். பேரப்பிள்ளையள்  எல்லாம் இவரில நல்ல உயிர். சுற்றிவர வந்து நின்று இவரின் கையைப் பிடிச்சுக்கொண்டு தாத்தா என்று விக்கியபடி இருக்கினம்.   

“எனக்கு ஒண்டும் இல்லை. அதுதான் நான் வீட்டை வந்திட்டன் தானே அழாதேங்கோ அப்பனவை”

“சந்திரா உன்ர கையால இடியப்பமும் சம்பலும் சொதியும் செய்துதா”   

தலையைத் திருப்பி மனைவியிடம் கேட்க “வருத்தமாக கிடந்தாலும் அவற்றை குரலிலை இருக்கிற கம்பீரம் குறையேல்லை” என எண்ணியபடி  எழுபத்தி ஐந்து வயதுக் குமரி மகிழ்வுடன் சமையலறைக்கு ஓடுகிறார்.

 

************************************************

 

பணக்காரக் குடும்பத்தில இந்திரன் மூத்த மகன். மூன்று பெயரை ஒன்றாகச் சேர்த்து பெற்றவர்கள் ஏன் அவனுக்கு வைத்தார்களோ என்று அவன் அடிக்கடி விசனப்பட்டதுண்டு. பள்ளிக்கூடத்தில சேரந்தபோது மார்க்கண்டு வாத்தியார் ஆரடா உனக்கு உந்தப் பெரிய பேரை வச்சது எண்டு சொல்லிக்கொண்டு அவனின் பெயரை உச்சரிக்க மற்றப் பிள்ளையள் எல்லாம் சிரிக்க இவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. என்ர பேர் நல்லாத்தானே இருக்கு என்று இவன் சொல்ல, “எனக்கு வாய் காட்டிறியோ. கையை நீட்டடா என்று சொல்லி தான் வைத்திருந்த பெரிய பிரம்பால் போட்ட அடியில் கை வீங்கியதுகூட இந்திரனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்த வாத்தியிட்டை இன்னும் எத்தனை நாட்கள் படிக்கவேணுமோ என்ற கவலையே பெரிதாக ஏற்பட்டது. அன்று மாலையே வீட்டுக்குப் போய்,

“ஏனமா இப்பிடிப்பெரிய பெயர் வச்சனீங்கள்” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்க,

“எல்லாரும் ஒரேமாதிரிப் பேர் தானே வைக்கிறவை. உன்ர பெயர் ஆருக்காவது இருக்கோ சொல்லு. மற்றவைக்கு ஒரேஒரு பேர்தான் இருக்கு. உனக்கு மூண்டுவிதமாக கூப்பிடலாம்”

தாய் கூறியது சரியாகவே பட அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. வளர வளர பெயரைக் குறுக்கிச் சிலர் தெய்வா என்றும் சில நண்பர்கள் இந்திரன் என்றும் அழைக்க இவனுக்கு இந்திரனே பிடித்துப்போனது.

பணக்காரச் செல்லர் என்ற தந்தையின் பட்டமே இவனைப் படிக்கவிடாது பின் தள்ளியது. உனக்கென்ன நல்ல சொத்துப்பத்து என்று நண்பர்கள் சொல்லும்போது இவனையறியாமலே ஒரு கர்வம் இவன் முகத்தில் வந்தமர்ந்துவிடும். இத்தனைக்கும் இந்திரனின் தந்தை ஒன்றும் உழைத்துப் பணக்காரர் ஆனவர் கிடையாது. பெரிதாகக் கல்வியறிவும் கிடையாது.

“அந்தக் காலத்தில வழியிலாத சனங்களின்ர காணியளைக் காசு குடுத்து எழுதிவாங்கினதும், விதானை, புரக்கராசி எல்லாம் சேர்ந்து கன காணியளை உப்பிடித்தான் காலாலை அளந்தே வாங்கினவை” என்று இவனின் தந்தையின் தாய்க்கிழவி பேரப்பிள்ளைகளை இருத்திவைத்துக் கதை சொல்லும் வேளைகளில் கூறும்போது,

“அதுக்கும் ஒரு திறமை வேணும் எல்லோ மாமி. எல்லாராலையும் அது முடியுமே” என்று மாமனாருக்கு இவன் தாயார் வக்காலத்து வாங்குவதையும் சிறு வயதில் கேட்டிருக்கிறான். ஊரில கால்வாசித் தோட்டக்காணி இவர்களதாய்த் தான் இருந்தது. தோட்ட வேலை செய்யவும் நிறையப்பேர் இருந்தார்கள்.

ஆனால் இந்திரனின் வீடு அத்தனை பெரிதாக இல்லை. வளவுதான் எட்டுப் பரப்பு. அந்தப்பக்கம் இரண்டு அறைகளுடன் ஒரு கட்டடம். பக்கத்தில சமையலறை. இந்தப்பக்கம் ஒரு அறை. மூண்டும் ஆண்பிள்ளைகள் என்றதால தானோ என்னவோ செல்லர் பெரிதாக வீட்டைக் கட்டவில்லை. பிள்ளைகளுக்கும் அந்த இரசனையும் இல்லை. இப்படியான விடயங்களில் பெண்கள் எல்லாத்துக்கும் ஆசைப்படுபவர்கள் என்ற குற்றச்சாட்டு இவனின் தாயோ அதற்கு எதிர்மாறாக இருந்தார். அதற்கு யாவரும் பெரிதாகப் படிக்காததுகூடக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும்  முற்றத்தில் தனியாக ஒரு கட்டடம். நாலு பக்கமும் குந்துகளேயன்றி சுவர் எழுப்பாமல் கத கத என்று நான்கு பக்கமும் காற்று வருவதுபோல் கட்டியிருந்தது நன்றாகத்தான் இருந்தது.

மூத்த பிள்ளை எண்டதாலை அவரை நன்றாகப் படிப்பிக்க வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டாலும் அவனால் முன்னிலை மாணவனாகவே முடியவில்லை. தந்தையும் நல்ல பள்ளிக்கூடங்கள் என்று இரண்டு மூன்றில் மாற்றிமாற்றிச் சேர்த்தும் பார்த்தார். ஆனால் நூல்கள் வாசிப்பதிலும், சமய அறிவுப் போட்டிக்களில் கலந்து பரிசுகள் எடுப்பதிலும் காட்டிய உற்சாகத்தையும் அக்கறையையும் படிப்பில் காட்டவே இந்திரனால் முடியவில்லை. தகப்பன் ஆசைப்பட்டதுபோல் பல்கலைக் கழகம் செல்லவும் முடியவில்லை.

சிறிய கதைகள் கட்டுரைகள் என்று எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப அவை வரவேற்புப் பெற்றன. “வெடிப்புக்கள்” என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதை உதயன் பத்திரிகையில் வந்து சிறந்த பாராட்டைப் பெற்றது. பெண்கள் உட்பட எத்தனையோ பேர் இவனை உற்சாகப்படுத்தி உதயன் பத்திரிக்கைக்குக் கடிதம் எழுதினர். அவற்றை அவர்கள் இந்திரனுக்கு  அனுப்பியிருந்தனர். கடிதங்களைப் பார்த்தபோது அவனுக்கு வானில் மிதப்பதுபோல் மகிழ்வேற்பட்டது. இன்னும் எழுதவேணும் என்ற உத்வேகமும் எழ அவன் எழுதிக் குவித்தான். இந்திரனின் கதை வருகின்றது என்றாலே பத்திரிகை வாங்குவோரும் அதிகரித்தனர்.

“சேற்றில் ஒரு செந்தாமரை” என்ற பெயரில் அவன் எழுதிய தொடர்கதை மிகப் பிரசித்தமானது. பிரபல எழுத்தாளராக இருந்த “செங்கை ஆழியான்” கூட தன்னை வந்து பார்க்கும்படி இந்திரனுக்குக் கடிதம் போட, அக்கடிதத்தை தன் நண்பர்களிடம் எல்லாம் காட்டி அவர்களைப் பொறாமை கொள்ள வைத்ததை எண்ணி இப்பவும் இந்திரன் சிரிப்பதுண்டு. ஆனாலும் அவன் செங்கை ஆழியான் கூப்பிட்டவுடன் ஓடவுமில்லை. இன்றுவரை போக நினைத்ததுமில்லை.   

நண்பர்களை விடுங்கள். அதன்பின் வந்த பெண் விசிறிகளின் கடிதங்களை வாசித்து முடிக்கவே அதிக நேரம் தேவைப்பட்டது. அந்த நேரம் வொலிங்டன் திரையரங்கில் வெளியாகிய “பலே பாண்டியா” திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்படத்தில் வந்த பாடல் வரிகளைத் தலைப்பாக்கி “நான் என்ன சொல்லிவிட்டேன்” என்னும் தலைப்பில் தொடர்கதையை வீரகேசரியில் ஆரம்பித்து அதை அவர்களே நாவலாகவும் வெளியிட்டு இரண்டாம் பதிப்பும் பதிப்பிக்கவேண்டி வர, முக்கியமான ஒரு எழுத்தாளராக இந்திரன் அறியப்பட, எழுதுவதிலும் அவனுடைய பெண் விசிறிகளைச் சமாளிப்பதே பெரும் பாடாகிப் போனது.

அவனின் எழுத்தாற்றலைக் கண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இவனை வேலையில் இணைந்துகொள்ளும்படி அழைத்தார்கள். இந்திரனின் பெருமை சொல்ல முடியாததாக, அவனுக்கே தாங்க முடியாததாக இருக்க, விண்வெளிக்குச் செல்லும் ஒருவன் போல தன்னை எண்ணிக்கொண்டு கற்பனைகளுடன் வேலைக்குக் கிளம்பினான்.

அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தானே முன்னிலை வகிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றவரை ஏறி மிதித்தபடி போய்க்கொண்டிருந்தனர். பெண்களுக்கு பேயும் இரங்கும் எண்டதால் அவர்கள் கலகலப்போடு தம் அலுவல்களைச் சாதித்துக்கொண்டனர். இவர் நினைத்ததற்கு நேர்மாறாக இவரை யாருமே ஒரு பெரிய எழுத்தாளர் என்று சட்டை செய்யவே இல்லை என்பது இவரின் தன்மானத்தைச் சீண்ட, நீங்களும் உங்கள் வேலையும் என்றுவிட்டு ஒரு மாதம் முடிய முன்னரே மீண்டும் இவரின் ஊருக்கு வந்துவிட்டார்.

கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாமே என நண்பர்கள் அங்கலாய்த்ததுக்கு “இவையிட்டையெல்லாம் பல்லைக்காட்டி வேலை செய்யவேண்டிய தலையெழுத்து எனக்கு இல்லை. அப்பர் சேர்த்து வைத்த  முதிசமே எவ்வளவு இருக்கு. என்ர பிள்ளையளுமே சும்மா இருந்து சாப்பிட ஏலும்” என்று திமிராகப் பதிலளிக்க, நண்பர்கள் வாயை நெளித்தும் கண்ணைக் காட்டியும் ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டதை இந்திரன் கவனிக்கவில்லை.  

வந்ததும் வாராததுமாக தன்னைச் சந்திக்க வருமாறு தூது அனுப்பிய அளவெட்டி வனஜா மூன்று மாதம் கற்பமாக இருப்பதாகக் கூற, பெரும் இடி ஒன்று தன்னைத் தாக்கியதுபோல் நிலைக்குலைந்தான் இந்திரன்.  

 

************************************************

  

 

திடீரென்று செத்தவீட்டில் சலசலப்பு அதிகமாக தேவர் கண்ணைத் திறந்து பார்க்கிறார். முன் வீட்டு கணபதிப்பிள்ளையின் மகள் சுகிர்தா “ ஐயோ எங்களை எல்லாம் விட்டுட்டுப் போட்டியளோ” என்று தலையிலடித்து அழுதபடி வருகிறாள். அவளைப் பார்த்தவுடன் எழும்பி இருந்து பார்க்கவேண்டும் போல இருக்க எழ முயற்சிக்கிறார். அவரின் கையைத் தவிர எதையுமே அசைக்க முடியவில்லை.

இப்ப உவளுக்கு அறுபது வயது இருக்கும் என்று எண்ணிய தேவர் இந்த வயதிலும் இன்னும் கட்டுக்குலையாமல்த்தான் இருக்கிறாள். சுருள் முடியும் இறுகிய உடலும் அவளின் வயதில் பத்தைக் குறைத்தே மற்றவர் மதிப்பிடுவதாய் இருக்கின்றது. தேவண்ணை தேவண்ணை என்று இந்த வீட்டு முற்றத்தைச் சுற்றியவள் தானே. இண்டைக்கு குழந்தை கணவன் பொறுப்புகள் எண்டு மட்டுமில்லை, மட்டுவிலுக்குக் கலியாணம் கட்டிப் போனபிறகு நெருங்கின உறவுகளின் திருமணத்தைத் தவிர வேறு எதுக்கும் இந்த ஊர்ப் பக்கம் அவள் எட்டியும் பாரக்கேல்லை. அப்படி எப்பவாவது தாயைப் பார்க்க வந்தாலும் புருஷனோட வந்திட்டு அப்பிடியே போய்விடுவாள். பிள்ளைகள் பேர்த்தியாரைப் பார்க்க சிலவேளை வாறதுதான். பெட்டை உரிச்சுவச்சு சுகிர்தா போலவே இருக்க, தேவர் பார்த்துவீட்டுப் போய்விடுவார்.

பிரேதத்துக்கு மேலே விழுந்துகட்டி அழுதுவிட்டு பக்கத்தில் கதிரையில் இருந்த சந்திராவைக் கட்டிப்பிடித்து அழத்தொடங்க, சந்திராவுக்கு வந்த கோபத்தில் சுகிர்தாவைத் தள்ளிய தள்ளில் சுகிர்தா ஒருவாறு சமாளித்து காலை ஊன்றி அப்பால் நகர்ந்துபோக, அதைக் கவனித்த தேவருக்கு சுகிர் தாவின் மேல் இரக்கமும் சந்திராவின் மேல் ஒருவித பச்சாதாபமும் எழுந்தது. கூடவே ஒரு பயமும் எழுந்தது. சந்திராவுக்கு அந்த விஷயம் தெரியுமோ? என்னட்டை ஒருநாளுமே தெரிஞ்சமாதிரி இதுவரை  காட்டிக்கொள்ளேல்லையே. சரியான அமசடக்கி தான் சந்திரா என்று எண்ணியவர் முந்தி நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் கொண்டுவர முயன்றார்.  

அக்கம் பக்கத்தவர் எல்லாம் இவர்கள் வீட்டுக்கு வந்து போவார்கள். வாசிப்பில் இவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக ஒரு அறை முழுவதும் கதைப்புத்தகங்கள் நிறைந்த அலுமாரிகள் நிறைந்திருக்க பலரும் வந்து வாங்கி இவரின் வீட்டுக் குந்தில் இருந்து வாசித்துவிட்டுப் போவார்கள். எவருக்குமே இவர் கொண்டுபோய் வாசிக்க அனுமதித்ததில்லை. இவர் பெற்றோர் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்கள் கூட அந்த அறையுள் இவர் அனுமதியின்றி நுழைவதே இல்லை. இவருக்கு அது கோவில் போல.

கோயில் திருவிழாக்கள் எண்டால் சொல்லி வேலையில்லை. சுவாமி தூக்குவது தொடக்கம் எல்லாமே இவர்கள் தலைமையில் நடக்கும். ஆண்கள் எல்லாம் வேட்டி கட்டி பார்க்கவே பக்தி மயமாக இருக்கும். இவர் வேட்டி கட்டி இடுப்பில் நிறத் துண்டு ஒண்டும் கட்டி யானைப்பல் வைத்துக் கட்டிய பென்ரன் கோர்த்த நாலு பவுன் சங்கிலியையும் கழுத்தில போட்டுக்கொண்டு றோட்டால போனால் ஆரெண்டாலும் திரும்பிப் பார்க்காமல் விடாயினை. அத்தனை கம்பீரமாகவும் அழகாகவும் இருப்பார். எத்தனையோ பெண்கள் எல்லாம் கண்களால் கதை சொல்லிவிட்டுக் கடந்து போவார்கள். ஊருக்குள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்பதில் இவர் கவனமாக இருந்தபடியால் நல்லகாலம் பல இடங்களில் தப்பிவிட்டார்.

சுகிர்தாவுக்கு அப்ப பதினேழு வயது தான் இருக்கும். இவருக்கு முப்பத்திமூன்று கடந்திட்டுது. தளதளவென பெரிய கண்களும் நீண்ட முடியுடனும் இருந்த அவள் அடிக்கடி கதைப் புத்தகம் வாங்க இவரிடம் வந்து நின்றாள். இவர் ஓரிருதடவை எடுத்துக் கொடுத்தார்தான். எப்பிடித்தான் அத்தனை விரைவாக வாசிச்சு முடிக்கிறாளோ என்று ஆச்சரியப்பட்டாரே ஒழிய படிக்கிற வயதில ஏன் இத்தனை புத்தகம் வாசிக்கிறாய் என்று ஒருமுறை கூட அவளைக் கண்டிக்காவோ கேட்கவோ செய்யவில்லை. அடிக்கடி வந்து வந்து அவள் புத்தகம் கேட்டதால் அவருக்கும் புத்தகங்களை எடுத்துக்  குடுக்கப் பஞ்சிப்பட்டு நீயே போய் எடு என்று கூறிவிட்டார்.

முன்னரெல்லாம் மற்றவர்கள் நிற்கும்போது வந்து நூல்களை வாங்கும் சுகிர்தா இப்போதெல்லாம் மற்றவர்கள் இல்லாத நேரமாகப் பார்த்து வருவதையும் நீண்ட நேரமாக அந்த அறையுள் நின்று நூல்களை எண்ணுவதையும் இவர் சில காலம் செல்லத்தான் உணர்ந்துகொண்டார்.  

இவரும் பாலை விரும்பிக் குடிக்கும் பூனைதானே. தானாக வந்து விழுவதை ஏன் வேண்டாம் என்பான். கோவிலில் மாலை நேரப் பூசை நடக்கும் போது மனைவியும் தாயும் சென்றுவிட இவர்கள் வீட்டிலும் ஆராதனை நடந்தது. சுகிர்தா இன்னும் பூப்பெய்தாததும் இவருக்குச் சாதகமாய்ப் போனது. பதினெட்டு வயதாகியும் அவள் அப்படியே இருக்க இன்னும் உன்ர மேள் பெரிசாகேல்லையே என்று கேட்போரின் வாய்க்காக அவளை பள்ளிக்கும் செல்லாமல் தடுத்ததும் நல்லதாயிற்று.

இவரோ எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி தொடர்ந்தும் தான் விருப்பப்படி இருக்கத் தலைப்பட்டார். பத்தொன்பது வயதில அவள் பெரிதானபின் கண்டபடி வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கட்டுப்பாடுகளும் அவளைக் கண்காணித்தபடி தாயோ அம்மம்மாவாரோ இருக்க அவரைப் பார்க்கவேணும் என்ற தவிப்பு உண்டானது. பெரிதான பிறகு எதுக்குத் தேவையில்லாத பிரச்சனை என்று தேவரும் அவளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தார்.

ஆனால் ஒருநாள் இவர் வீரகேசரியை வாசித்துக்கொண்டு இருந்தபோது திடுதிப்பென்று சுகிர்தா இவர் முன்னால் வந்து நின்றாள். நீங்கள் என்னை ஒரேயடியா கைகழுவி விட்டுட்டியளோ. என்னை ஏமாத்திப்போட்டியள் என்று அவள் கூற தேவர் வெலவெலுத்துப்போய் கதிரையை விட்டு எழுந்தார்.

“உனக்கு என்ன விசரே. வீட்டில ஆக்கள் நிக்கினம். நான் பிறகு கதைக்கிறான். முதல்ல வெளிய போ” என்று உறுக்க,

“இண்டைக்கு நீங்கள் ஒரு முடிவு சொல்லுமட்டும் நான் போக மாட்டான்” என்று வீம்புடன் நிக்க, மனைவியும் தாயும் வீட்டில் தான் என்னும் எண்ணத்தில் தவிப்புக் கூடி முதல்முறையாக கைகால்களில் நடுக்கமும் பதட்டமும்  ஏற்பட்டது.

“எளிய நாயே. அவன் கலியாணம் கட்டினவன் எண்டு தெரிஞ்சும் இப்பிடி வந்து நிண்டு கதைக்க உனக்கு வெக்கம் இல்லையே” என்றபடி தாய் சுகிர்தாவை தலைமயிரில பிடிச்சு இழுத்துக்கொண்டு போய் அவளின் வீட்டுக்குள் தள்ளிவிட்டு வந்ததும், மனைவிக்கு ஏதும் கேட்டிருக்குமோ என்ற பதட்டத்துடன் சுற்றுமுற்றும் பார்க்க, மனைவியின் தலை தெரியாததில் இவர் நின்மதிப் பெருமூச்சு விட்டதும் இவருள் இப்பவும் ஒரு உலுக்கத்தை ஏற்படுத்த நடுக்கத்துடன் பெருமூச்சொன்று வெளிவந்தது. சந்திராவுக்குத் தெரிந்தும் அவள் ஒருநாள்க்கூட என்னை எதுவும் கேட்கவே இல்லை என்னும் எண்ணம் எழுந்ததும் அவரை அறியாமல் கண்கள் நிறைகின்றன.

 

************************************************

இந்திரனின் நண்பன் மாறனுக்கு நேற்றுத்தான் அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்திருந்தது. வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவதில் இருந்து எல்லோரையும் தண்ணி வென்னி எல்லாம் குடுத்து உபசரிப்பது உங்கள் வேலை என்று மாறன் கட்டன் றைற்றாகக் சொன்னதால எல்லா நண்பர்களும் ஒரு குறையும் விடாமல் வந்தவர்களை உபசரித்து அனுப்பி ஒருவாறு எல்லாம் முடிந்தாயிற்று. பெண் வீட்டில் நாலாம் சடங்கு. கட்டாயம் எல்லாரும் வந்திடுங்கோடா என மாறன் சொன்னதைத் தட்டாமல் இந்திரனும் மற்ற நண்பர்களுடன் செல்லத்தான் எண்ணியிருக்கின்றான்.

“உனக்கும் முப்பத்தைந்தாகுது. எத்தனை நாளைக்குத்தான் சாக்குப்போக்குச் சொல்லப்போறாய். நீ கட்டினாத்தானே உன்ர தம்பிமாருக்கும் கட்டிவைக்கலாம்” என்ற வழமையான தாயின் புலம்பலுக்கு,

“அம்மா என்னைப் பார்க்கவேண்டாம். எனக்கு எப்ப முடிக்கவேணும் என்று தோன்றுதோ அப்ப உங்களிட்டைச் சொல்லுறன். முதல்ல தம்பிக்கு பாருங்கோ”

“அப்ப அதுவரை ஊர் மேஞ்சு கொண்டு இருக்கப்போறியோ”

தாய் கூறியதைக் காதில் வாங்காதவன் போல சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் இந்திரன்.

அன்று மாலை நாலாம் சடங்குக்கு நல்லா வெளிக்கிட்டுக்கொண்டு போய் நண்பனுக்குப் பக்கத்தில் இவர்களுக்கும் கதிரை கொண்டுவந்து போடுகிறார்கள். பெண்கள் எல்லாம் அப்போது கதிரைகளில் இருப்பதில்லை. அழகிய பாய்கள் நிலத்தில் விரிக்கப்பட்டிருக்கும். வருபவர்கள் குழுவாகவோ அல்லது குடும்பத்துடனோ அமர்ந்திருக்க எவசில்வர் தட்டிலோ அல்லது பித்தளைத் தாம்பாளத்திலோ பலகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும். சில்வர் தேநீர் குவளைகளில் சுடச் சுடப் பரிமாறப்படும் டரின்பால் விட்ட தேனீரும் கூட சுவையாக இருக்கும்.

ஆண்களுக்கு பந்தலினுள்ளே கதிரைகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் போகும்போது மட்டும் மாப்பிளையையும் பெண்ணையும் எட்டிப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தபடி போட்டுவாறன் என்று கூறிவிட்டுச் செல்வார்கள். இவர்கள் நண்பர்கள் என்பதனால் பக்கத்தில் கதிரைபோட்ட உபசரிப்பு.

இந்திரன் வெள்ளை பெல்பொட்டமும் செம்மஞ்சள் நிற சேர்ட்டும் போட்டு வந்துள்ளான். அடர் மீசையும் மேலே சிறிது திறந்துவிட்ட அங்கியூடாகத் தெரியும் சங்கிலியும் மாப்பிள்ளைபோலவே தெரிக்கிறான். மற்ற நண்பர்கள் கூட நன்றாகவே இருக்கின்றனர். இரு குமர்ப்பெண்கள் ஓடியாடி எல்லோருக்கும் சிற்றுண்டியும் தேனீரும் பரிமாறுகின்றனர். தேவதைபோல் ஒருத்தி இவர்களுக்கு சிறுசிறு தட்டுக்களில் பழக்காரவகைகளுடன் இவர்களை நோக்கி வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டை எடுத்துக் கொடுக்கிறாள். ஒவ்வொருவரிடமும் கொடுக்கும்போதுகூட அவள் யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த நிறமும் அமைதியான அழகிய முகமும் அவளின் ஆடையும் அவளின் பண்பைச் சொல்லி நிறக்கின்றது.

“எடேய் மச்சான். சினிமாவில நடிக்க வைக்கலாம் போல இவ்வளவு அழகாய் இருக்கிறாள். ஆரடா இது” என்று நண்பனிடம் முணுமுணுக்கிறான் இந்திரன். “எனக்குத் தெரியாதடா இவவைத்தான் கேட்கவேணும். இப்ப கேட்டு என்ர குடும்பத்தைக் குழப்ப ஏலாது. கொஞ்சம் பொறுமையாய் இரு” என்கிறான்.

வீட்டுக்கு வந்த பின்னரும் அந்தப் பெண்ணின் நினைப்பாகவே இருக்கிறது.

எவ்வளவு அமைதியும் அழகும். எத்தனை பெண்கள் என் மேல் வந்து விழுந்திருக்கிறார்கள். இவளை விடக்கூடாது. எனக்கானவள் இவள்தான் என்று எண்ணிக் கனவுகளுடன் மனம் கனக்க, யாரும் இவளைக் கொத்திக்கொண்டு போக முதல் நான் முந்தவேண்டும் என்பதுவாய் மூன்று நாட்கள் சென்றபின் வெட்கத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு நண்பன் வீட்டுக்குச் செல்கிறான்.

“நான் இவாவிட்டைக் கேட்டனான். இவவின் மாமியின் மகளாம். ஆனா என் மனிசியின்ர குடும்பம் மாதிரி வசதி ஒண்டும் இல்லை. ஒரு சீதானமும் எதிர்பார்க்கேலாது மச்சான். மூண்டு பெட்டைகளில இது கடைசிப் பெட்டையாம். மற்ற இண்டுபேரும் கலியாணம் கட்டீட்டினம். ஆனா இப்பவே சொல்லிப்போட்டன்.  என்னை ஒண்டுக்கும் சாட்டப்படாது. நல்ல பிள்ளையாம். ராமநாதன் கொலிச்சில படிச்சிட்டு வேலை தேடிக்கொண்டிருக்குதாம். யூனிவேசிற்றி கிடைக்கேல்லையாம்” கிளார்க் வேலை ஒண்டுக்கு அப்பிளிக்கேசன் போட்டுட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறாவாம். வதானா எண்டு கூப்பிடுறவையாம்”

சிவம் சொல்லி முடிக்கமுதலே தகப்பன்ர பெயரைச் சொல்லு. எங்க இருக்கிறவை? என்று அவதிப்பட்டான் இந்திரன்.

உடுவில் லேடீஸ் கொலிச்சுக்குப் பக்கத்தில குலத்தார் வீடு எங்கே எண்டால் காட்டுவினமாம்.

“சரியடா வாறன்” என்றுவிட்டு சைக்கிளை மிதித்தவன் தாயின் முன் வந்து நின்றான்.

“அம்மா எனக்கு அந்தப் பிள்ளையை நல்லாப் பிடிச்சிருக்கு. நான் இப்ப கலியாணம் செய்ய ரெடி. மிச்ச அலுவலை நீங்கள் தான் கெதியாப் பார்க்கவேணும்” என்று முடித்தான்.

ஒரு மாதத்திலேயே திருமணப் பேச்சு முடிந்து திருமணமும் முடிந்து வதானா குனிந்ததலை நிமிராமல் இவர்கள் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள். அதிர்ந்து பேசத் தெரியாத வதானாவை எல்லோருக்கும் பிடித்துப்போனது. அண்ணி அண்ணி என்று இந்திரனின் சகோதரர்கள் அன்பையும் மரியாதையையும் காட்டினார்கள்.

மாமியார் தான் பெரிதாக வதானாவை மதிக்கவில்லை. எல்லா வேலைகளையும் இவள் தலையில் சுமத்திவிட்டு அங்கும் இங்கும் வலம் வந்துகொண்டிருந்தாள். அவவுக்கும் வயது போட்டுது தானே என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டு இது என் வீட்டு வேலைதானே என எண்ணியபடி எந்தவித முகச்சுழிப்புமின்றி வேலை செய்தாள் வதானா.

திருமணமாகி ஒரு மாதத்திலே இவளுக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக இவளின் தாயார் கொண்டுவந்து கொடுத்தபோது ஏனோ தானோவென அதை உடைத்தவளுக்கு முகம் முழுதும் விளக்கெரிந்தது.

“அம்மா எனக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கு” என்று மகிழ்வுடன் கூறும் மகளை அம்மா பார்த்த பார்வையில் எவ்வித பூரிப்பும் இருக்கவில்லை.

“ஏனம்மா எனக்கு வேலை கிடைச்சது உங்களுக்கு சந்தோசம் இல்லையோ”

கவலையுடன் கேட்ட மகளுக்கு என்னத்தைச் சொல்வாள் அவள்.

“கலியாணம் கட்டின பிறகு அவர் என்ன சொல்லுவாரோ எனக்குத் தெரியாது. எதுக்கும் கேட்டுப் பாரம்மா. சம்மதிச்சால் போ. இல்லையெண்டாலும் என்ன. முந்தி எண்டால் வேலைதான் முக்கியம் எண்டு சொல்லியிருப்பன். இப்ப நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதோடை திருப்திப்பட்டுக் கொள்ளம்மா” என்று புத்திசொல்லிவிட்டுப் போகும் தாயை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இந்திரன் வந்தவுடன் மகிழ்ச்சியுடன் தனக்கு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வாங்கிப் பார்த்தவன் மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட “வாழ்த்துக்கள் வதானா. ஆனால் மட்டக்களப்புக்குப் போய் நீர் வேலை செய்ய நான் இங்க தனிய இருக்கேலுமே. இங்கினேக்கை எண்டால் கட்டாயம் போம் என்று நானே அனுப்பியிருப்பன்” என்று கூறிவிட்டு அவளைப் பார்க்கத் துணிவின்றி அப்பால் நகர வதானாவுக்கு அழுகை வந்தது.

பெலத்து அழக்கூட என்னால் முடியவில்லையே. இந்த வேலை ஒரு மாதத்தின் முன்னம் கிடைத்திருந்தால் கலியாணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றாவது கலியாணம் காட்டாது வேலைக்குப் போயிருப்பன். என் விதி இதுதான் போல என மனதைத் தேற்றிக்கொண்டாள்.

அடுத்த வாரம் தமக்கை தாய் வீட்டுக்கு வருகிறாள் எனக் கேள்விப்பட்டு கணவனின் அனுமதியுடன் அங்கு சென்றவள் தமக்கையைக் கட்டிப்பிடித்து “சின்னக்கா வேலை கிடைத்தும் என்னால போக முடியேலையே” என விக்கி விக்கி அழுபவளை ஆறுதல் படுத்த அவளின் முதுகை ஆதரவாக வருடிக்க கொடுத்தபடி இருந்தாள் வதானாவின் இளைய சகோதரி.

அவள் கச்சேரியில் வேலை பார்க்கிறாள். கணவனும் பேராசிரியராக இருப்பதனால் இருவரும் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். மூத்த சகோதரிக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. ஆனாலும் கடைசித் தங்கைமேல் பாசம் இருக்கிறதா இல்லையா என்பதுபோல் நடந்துகொள்வாள். பெரிதாக யாரையுமே தன்னுடன் ஒட்ட விட்டது கிடையாது. வசதியாகத்தான் வாழ்கிறாள். ஆனாலும் தங்கையின் திருமணத்துக்கு ஒரு அட்டியல் செய்துபோடுமாறு தாய் கேட்டும், தந்தை வேலை செய்யும்போது  கிளிநொச்சியில் வாங்கிப்போட்ட மூன்று ஏக்கர் காணியை தனக்கு எழுதுங்கோ என்று விடாப்பிடியாய் நிண்டு தான் பேருக்கு மாற்றிய பிறகுதான் தங்கையின் திருமணத்துக்கு நகையைச் செய்து கொடுத்தாள்.

வதானாவின் சின்னக்கா “அப்புவுக்கும் ஆச்சிக்கும் சரியான விசர். அரசாங்க உத்தியோகம் பாக்கிற மாப்பிளை எண்டு எல்லாக் காணியளையும் அக்காவுக்கே சீதானமாய்க் குடுத்திட்டு எங்கள் இரண்டு பேரையும் அனாதைகள் போல விட்டிட்டினம் என்று அடிக்கடி வதானாவிடம் மட்டும் அங்கலாய்ப்பாள். அந்தக் கோபத்துடனேயே படித்து கச்சேரியில் வேலை கிடைத்ததும் தகப்பன் ஈடுவைத்த மூன்று பரப்புக் காணியை மீண்டு, அதில் வீடு ஒன்றும் கட்டி நன்றாகத்தான் வாழ்கிறாள்.

“எனக்கு இங்கே எங்காவது வேலை கிடைச்சிருந்தால் நான் கட்டாயம் விட்டிருப்பன். நீ இல்லாமல் நான் எப்பிடித் தனிய இருக்கிறது எண்டு சொன்னவர்” என்று தன் கணவனையும் விட்டுக்கொடுக்காது கூறியவளை அன்பொழுகப் பார்த்தாள் தமக்கை.

 

****************************************** 

 

வதானாவுக்கு எல்லாமே பழகிவிட்டது. இந்திரன் இப்பொழுதெல்லாம் எழுதுவதுக்கூட இல்லை. சும்மா இருக்காமல் ஏதும் எழுதுங்கோ எண்டால் எனக்கு நீ புத்தி சொல்லாதை, எனக்கு என்ர அலுவல் தெரியும் என்பான்.

முன்புபோல இல்லை இப்ப எல்லாம். செல்லருக்கும் தோட்டங்களைப் பராமரிப்பது கடினமாக இருந்தது. இரண்டாவது மகன் முன்பு இவருடன் தோட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டான். இப்ப அவனும் ஆசிரியர் வேலை கிடைச்சு மட்டக்களப்புக்குப் போய்விட்டான். அவனுக்கும் நிறையச் சம்மந்தம் வருகிறது. வேளைக்கு அவனுக்கும் திருமணம் செய்து வைக்கவேணும் என்று எண்ணியபடி இந்திரனை அழைத்தார் செல்லர்.

“தம்பி எவ்வளவு நாளைக்குத்தான் இப்பிடிப் பொறுபில்லாமல் இறுக்கப்போறாய். ஏதேனும் வேலைவெட்டி தேடவேணும். இல்லாட்டில் தோட்டங்களையாவது பாக்கவேணும். உவன் கடைசி குகனும் இவ்வளவுநாள் தோட்டவேலையளுக்கு உதவி செய்தவன். இப்ப அவன் யூனிவேசிற்றிக்குப் போப்போறான். இனி நீதான் எல்லாத்தையும் பாக்கவேணும்” என்று தகப்பன் கூறிய பிறகு மறுத்து எதுவும் சொல்ல முடியாது தலையாட்டிவிட்டுச் சென்றான் இந்திரன்.

மற்றவரிடம் சென்று கையேந்தி வாழ அவனுக்குத் துளிகூட விருப்பம் இல்லை. வதானாவுக்கு சீதனம் என்று இவன் கேட்கவில்லையே ஒழிய, ”உங்களால முடிஞ்சதைச் செய்து போடுங்கோ” என்று இவனின் தாயார் சொன்னதாலை மட்டுமில்லை, சும்மா தங்கச்சியை அனுப்பக் கூடாது எண்டு வதானாவின் சின்னக்கா சொல்லி இரண்டு சோடி காப்புகளும் பதக்கமும் தானே செய்து போட்டு தமக்கை கொடுத்த அட்டியலோடு தங்கையைச் சிறப்பாய் அனுப்பி வைத்தார்கள்.

வதானா திருமணமாகி மூன்று மாதங்களில் கர்ப்பமாகி அயலட்டையாரின் வெறும் வாய் மெல்ல சந்தர்ப்பம் கொடுக்காது எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். ஆனாலும் அவளை ஆசைக்கு இரு வாரம் கூட அவள் வீட்டில் இருக்க விடாது இங்கே வேலைகள் குவிந்திருந்தன. எட்டாம் மாதம் நடக்கும்போது சின்னக்காவும் தாயாரும் தம்முடன் அழைத்துப் போகிறோம் என்றதற்கு “ஏன் நாங்கள் ஒழுங்காப் பார்க்க மாட்டமோ” என்று மாமியார் கூறியதில் வதானாவின் ஆசையும் மதுக்குள்ளேயே அடங்கிப்போக தமக்கையும் தாயும் வேறு வழியின்றித் திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று.

மாமியார் உதவிகள் செய்தார்தான். ஆனாலும் இந்திரன் தன் வேலையில் ஒன்றைக் கூட தான் செய்ய முன்வரவில்லை. 

ஒன்பதாம் மாதத்தில் ஒருநாள் நோவெடுக்க சொக்கனின் காரைப் பிடிச்சு யாழ்ப்பாணம் பெரியாசுபத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். மாமியாரும் கூடவே வந்திருந்தது வதானாவுக்குத் தெம்பாக இருந்தது. இரண்டு மணிநேர வாதைக்குப் பின்னர் ஆண் குழந்தை எவ்வித அசுமாத்தமும் இன்றி வெளியே வர வதானாவுக்கு அரை மயக்கமாய் இருந்தது.

“இவான்ர புருஷன் வெளியில நிண்டாக் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்று அந்தப் பெண் மருத்துவர் கூற, மனப் பதைப்புடன் தாய் சென்று மகனை அழைத்து வந்தார். சொறி குழந்தை பிறக்கேக்குள்ளையே செத்துத்தான் பிறந்தது. ஒருக்கா வடிவாப் பிள்ளையைப் பாருங்கோ. தாய்க்கு மயக்கம் தெளியமுதல் பிள்ளையை எடுத்துக் கொண்டுபோய்விட வேண்டும்  என்றுவிட்டு மருத்துவர் அகல..  

“அளவெட்டிக் காறியின்ர பிள்ளையையும் கலைப்பிச்சு அவளைக் கைகழுவி விட்டதுக்குத் தான்ரா உனக்கு உந்தத் தண்டனை கிடைச்சிருக்கு” தாய் கூறப் பதட்டத்துடன் “வாயை மூடெணை” எனத் தாயை உறுக்கியவன் வதனா கேட்டிருப்பாளோ என்று துணுக்குற்றான்.

தாய் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல வதனா என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவளுக்கு எல்லாமே நன்றாகக் கேட்டதுதான். ஆயினும் கண்களை தொடர்ந்தும் மூடியபடி மயக்கத்தில் இருப்பதுபோல் இருந்தாள். மனதில் எழுந்த வெறுமையும் ஏக்கமும் கவலையும் கண்ணீராக மூடிய கண்களினூடாக வழிந்தபடி இருக்க எதுவும் செய்வதற்று தொய்ந்துபோய்க் கிடந்தாள் வதானா.

அவன் சிறிது நேரத்தில் அப்பால் செல்ல வெடிக்கும் மனதுடன் அசையாது கிடந்த குழந்தையை எடுத்து நெஞ்சோடு அணைக்கவேண்டும்போல் இருக்க மெதுவாகக் கைகளை ஊன்றியபடி எழும்ப எத்தனிக்க, அதற்குள் பெண் தாதியும் அவனின் தாயாரும் உள்ளே வந்து அவளை எழும்பவேண்டாம் என எச்சரித்துவிட்டு பிள்ளையை இவளுக்குக் காட்டிவிட்டு உடனே வெளியே கொண்டுசெல்ல எப்படித் தன் கவலையை வெளிப்படுத்துவது என்று கூடத் தெரியாமல் படுத்துக்கிடந்தாள் வதனா.   

குழந்தை அதுவும் ஆண்குழந்தை இறந்துவிட்டது அனைவருக்கும் மிகக் கவலையாக இருக்க இந்திரனுக்கு நரக வேதனையாக இருந்தது. அவளை எங்களோடை அனுப்பியிருந்தால் இப்பிடி நடந்திருக்காது என்று ஏசிவிட்டு அவளை வைத்தியசாலையிலிருந்தே தன்னுடன் சின்னக்கா கூட்டிச் சென்றாள். மனதிலை கவலையளை வச்சிருக்காமல் இணக்கை ஏந்தாலும் வடிவா அழுதிடு என்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை நன்றாகத் தேற்றி ஒரு மாதம் சென்றபிறகே இந்திரனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வதானாவைக் கண்டதும்தான் இந்திரனுக்கு உயிர் வந்தது போல இருந்தது. வதானாவுக்கு எதுவுமே சொல்லாமலேயே அதது அவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. “எங்கிருந்தோ வந்தாள். எனக்காகவே வந்தாள்” என்றுதான் அவள் இவனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும்போதெல்லாம் இந்திரன் எண்ணிக்கொள்வதுண்டு.

அவள் இல்லாமல் தாய் வைத்துக் கொடுத்த சுரணைகெட்ட தேனீரும் உணவுகளும் அயன் செய்யாத ஆடைகளும் எல்லாமே அவளின் அருமையை உணரவைத்தன.

உடையவன் உழைத்தால் தான் தோட்டமும் தொழிலும். இந்திரனுக்கு மண்வெட்டி பிடித்து வாய்க்காலில் நீர் கட்டக்கூடத் தெரியாமல் இருந்தது. எல்லாத்துக்கும் கூலிக்கு ஆள் வைத்து விவசாயம் செய்ததில் பெரு நட்டமே ஏற்பட்டது. வதானாவின் நகைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போயின. அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து மூக்கும் முழியுமாக எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு பெண் குழந்தை. அவர்கள் எல்லாம் ஆண்பிள்ளைகள் என்றதாலோ அல்லது முதல் முதல் வதானாவுக்குப் பிறந்தது ஆண் குழந்தை என்பதாலோ என்னவோ இந்திரனோ தாயோ கூட ஆண் குழந்தை என்ற பெயரை மறந்துபோயும் உச்சரிப்பதுமில்லை. ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டதும் இல்லை.

பிள்ளைகள் வளர வளர பணம் தேவைப்பட “உவ்வளவு காணிகளை வச்சு என்ன செய்யப்போறம்” என்று சில நிலங்களையும் அப்பப்ப விற்றுக்  குடும்பத்தை நடத்தினாலும் எந்தவிதக் குற்ற உணர்வும் இந்திரனுக்கு ஏற்பட்டதே இல்லை. 

அதன் பிறகும் இந்திரன் சில நாவல்களை எழுதினான்தான். ஒரு நாவலுக்கு சாகித்திய விருதும் கிடைத்ததுதான். ஆனால் அதனால் கிடைத்த சொற்ப வருமானம் அவரின் குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கவில்லை. மண்வெட்டி எடுத்துத் தோட்டம் கொத்தவோ வேறு வேலை செய்யவோ இந்திரனால் முடியாதது அவன் குற்றமா என்ன? சிறுவயதில் இருந்தே எனக்குப் பொறுப்பைப் பழக்கியிருக்க வேணும். பிழை விட்டது அம்மாவும் அப்பரும் தான். இன்னும் காணியள்  கிடக்குத்தானே. பார்த்துக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

அப்பப்ப இவனின் கதைகளை வாசித்த பல்கலைக் கழக மாணவர்கள் இவனை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அவர்களுடன் பலவிடயங்களையும் விவாதிக்குமளவு பொது விடயங்களையெல்லாம் கரைத்துக்குடித்து வைத்திருந்தான் இந்திரன். வதானாவுக்கு இவர் வேலை எதுவும் செய்யாது திண்ணையில் இருந்து விவாதிப்பது எரிச்சல் கொடுத்தாலும் பெருமையாகவும் இருந்ததுதான். எனக்கு அந்தளவு அறிவு இல்லை. விஷயமில்லாமலோ அவரைத் தேடி வரீனம் என தமக்கையாருடன் கதைக்கும் போது கூறுவதை தமக்கையோ சிரித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாளேயன்றி தங்கையின் மனதைப் புண்படுத்தக் கூடாது என எதிர்மறையாகக் கதைத்ததில்லை..

வதானா வெறுங்கையுடன் வந்ததைப் பொறுக்க முடியாமல் தன் காப்புகளில் ஒரு சோடியை வேண்டாம் என்று சொன்ன தங்கைக்குப் போட்டே அனுப்பினாள். எக்காரணம் கொண்டும் இதை உன்ர கையைவிட்டுக் கழட்டவே கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டும் தான் இவளை அனுப்பினாள்.

ஆனால் அக்காப்பு ஆறு மாதங்களின் பின்னர் அடக்குக் கடைக்குப் போனதையும் அதேபோன்ற கிலிட்டுக் காப்பு ஒன்றைக் கணவன் அவளுக்கு மாற்றிச் செய்து கொடுத்ததையும் அவளும் தெரிந்ததுபோல் இந்திரனுக்குக் காட்டிக்கொள்ளவில்லை. மறந்துபோய்த்தன்னும் தமக்கைக்கு மட்டுமல்ல யாருக்குமே கூறவில்லை.

 

*****************************************************

 

ஐயர் வந்து கிரியைகள் எல்லாம் முடிந்து பிள்ளைகள் வாய்க்கரிசி போட்டு பேரபிள்ளைகள் எல்லாம் சுற்றி நின்று நெய்ப்பந்தம் பிடித்து முடிய ஊரில் உள்ள பெரியவர்கள் சிலரும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் அவரைப்பற்றி ஆகா ஓகோவென்றெலாம் புகழ, கேட்டுக்கொண்டிருந்த சில உறவினர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது. சிலருக்கோ அட இப்பிடி எல்லாம் கூட நடந்திருக்கா. எங்களுக்குத் தெரியாமல் போட்டுதே இவ்வளவு நாளும் என எண்ணியபடி வாய்பிளந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர்.  

“இவர் இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எம்மூரில் பிறந்தது நாம் செய்த பாக்கியம். இத்தனை விரைவில் இவர் மரணமடைந்தது எமக்கெல்லாம் பெரிய இழப்பு” என்று கூறிவிட்டு அமர்ந்தார் ஒருவர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் இருந்தது.

“இவன் எண்பத்தைந்து வயதுவரை இருந்து எழுதினதைத் தவிர என்னத்தைச் சாதிச்சுக் கிழிச்சான் என்று இன்னும் இருந்திருக்க வேண்டும் என்று உப்பிடிக்க கதைக்கிறாங்கள்”

“பிள்ளையளுக்கும் பெண்டிலுக்கும் சோறு போட்டதும், உடம்பை வளர்த்ததும், பிள்ளையளைக் கலியாணம் கட்டிக் குடுத்ததும் தகப்பன் சேர்த்து வச்ச சொத்துக்களை விற்றுத்தான்” இவர் மனதில் எண்ணி முடிய முதல் அடுத்தவர் ஆரம்பித்துவிட்டார்.

“இவரைப்போல ஒருவரை நான் இதுவரை காணவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிடைத்த அரசாங்க வேலையைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டு இந்த மண்ணுக்காக உழைக்கவேண்டும் என்று தோட்டம் செய்து உழைத்துச் சாப்பிட்ட உழைப்பாளி இவர்”

“எடேய்.. செத்தவீட்டில ஒருத்தரும் வந்தும் சொல்ல மாட்டினம் எண்டு இப்பிடி எல்லாமா புழுகுவியள். தோட்டத்தைப் பாக்கிறன் எண்டு தோட்டத்துக்குப் பக்கத்தில இருந்த சுகுணாவைப் பார்க்கப் போறது உவங்களுக்குத் தெரியாது போல” மனதுள் எண்ணியவுடனேயே இவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல இருந்ததை அடக்கிக்கொண்டார்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அரச வேலையோ இல்லையோ எண்டு இவருக்கு இப்ப சந்தேகம் வந்தது. “இப்ப கோதாரி ஆரிட்டைக் கேட்கமுடியும்” என்று தன்மனதை அடக்கிக் கொண்டார்.

எண்டாலும் உந்தக் கொறோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தின பிறகு செத்ததால ஊரிப்பட்ட சனம். ஒரு இருநூறு முன்னூறு பேராவது இருக்கும். இரண்டு கிழமைக்கு முதல் செத்த பாக்கியத்துக்கு இருபது பேர் கூடப் போகேல்லையாம். பாடை கட்டவும் ஆட்கள் வரேல்லை. ஐயரும் பயத்தில போகாமல் ஒரு இருபது பேரோடை வானிலதான் கொண்டு போய் எரிச்சதெண்டு இவரை வருத்தம் பார்க்க வந்த கந்தசாமி சொன்னவன்.

பெரிய வடிவான பாடைகட்டி தென்னோலையெல்லாம் பின்னி, பூமாலை எல்லாம் கட்டி பார்க்கவே அழகாய்த்தான் இருக்கு. எனக்கே ஏறிப் போய்ப் படுக்கவேணும் போல இருக்கு என்று எண்ணித் தன்பாட்டில் சிரித்துக்கொண்டார் செல்லர்.

திடீரென பெருங் குரலெடுத்து எல்லோரும் அழுகின்றார்கள். திடுக்கிட்ட செல்லர் என்ன நடக்குது என்று நினைவுகளைத் தள்ளிவிட்டுப் பார்க்கிறார். சவப்பெட்டியை மூடுகிறார்கள். மூடவிடாது பிள்ளைகளும் மனைவியும் பிடித்துக்கொண்டு கத்த, அவர்களை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக மூடியபின் உரித்துடையவர்கள் ஆறுபேர் நான் முந்தி நீ முந்தி என தள்ளுப்பட்டு அவரின் பிரேதப் பெட்டியைக் கொண்டுபோய் பாடையில் வைத்துவிட்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள்.

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் 

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண்  டாடாண்டு டண் டண்

மேளச் சத்தம் காதைப் பிளக்கும்படி இருக்கிறது. தேவரின் எரிச்சல் அதிகரிக்கப் பாடை நகர்ந்தபடி இருக்கின்றது.

“என்றாலும் நான் குடுத்துவைத்துத்தான் பிறந்திருக்கிறேன். இத்தனை நாட்கள் இராசா மாதிரி இருந்தேன். எந்தக் குறையும் இல்லாமல் மனைவி பிள்ளைகள் பார்த்துக்கொண்டார்கள். இறந்தபின்னும் சிறப்பாகப் பாடைகட்டி இத்தனைபேர் பின்தொடரச் செல்கிறேனே. பாவம் சந்திரவதனா நானில்லாமல் என்ன செய்யப்போறாளோ. என்னோடை அவளையும் கூட்டிக்கொண்டு போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும்” என்று எண்ணியபோதே உடலெங்கும் விசுக்கென இழுபட, தன் செத்தவீட்டை இத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்த இந்திரன், தேவர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட தெய்வேந்திரத் தேவரின் உயிர், மிகுதி இறுதி ஊர்வல நிகழ்வைப் பார்க்க முடியாதவாறு எங்கோ வேகமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.